நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ராஜா மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது பெருமகிழ்ச்சி என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னிய சமூக மக்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் சென்னை உயர்நீதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி வழக்கு நேற்று ரத்து செய்யப்பட்டது.

ஜெய் பீம் திரைப்பட வழக்கு ரத்து செய்யப்பட்டது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய்பீம் திரைப்படம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றியடைந்தது. அதனால் ஆத்திரமடைந்த சாதிய, வகுப்புவாத சக்திகள், திரைப்பட குழுவின் மீது குற்ற வழக்கு பதிவு செய்தார்கள். அதற்கு காரணமாக சொல்லப்பட்ட ஒரு காலண்டர் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட அவர்களின் ஆத்திரம் அடங்கவில்லை. படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா என எல்லோர் மீதும் வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.இந்த நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த உயர் நீதிமன்றம் ஜெய்பீம் தொடர்பான வழக்கினை ரத்து செய்துள்ளது வரவேற்கதக்கது. நல்ல கதையம்சம் கொண்ட, மனித உரிமைகளை உயர்த்திப்பிடிக்கும் திரைப்படங்களை அச்சமின்றி தயாரிக்கும் சூழல் நிலவ வேண்டும். அதற்கு எதிரான ஆதிக்க சக்திகளின் முயற்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி.” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வம்
