’மோடி 100 மணி நேரம் உழைக்கும் போது, நாம் ஏன் உழைக்கக்கூடாது?’ : இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி

Published On:

| By Minnambalam Login1

infosys narayanamurthy 100 hours

பிரதமர் மோடி 100 மணி நேரம் உழைக்கும் போது நாம் ஏன் உழைக்கக்கூடாது என்று இன்ஃபோஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தி நேற்று(நவம்பர் 14) சிஎன்பிசி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் உலகம் முழுவதும் அதீத வேலைப் பளு காரணமாக ஊழியர்கள் வெகு சீக்கிரத்தில் சோர்வடைவதும், சில நேரத்தில் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடந்த வருகின்றன.

கடந்த ஜூலை 21ஆம் தேதி எர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்தின் புனே அலுவலகத்தின் ஊழியரான அண்ணா செபாஸ்ட்டியன் பெரயில் திடீரென உயிரிழந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 22. இது குறித்து அவரது தாயார் கூறுகையில்  “வேலைப் பளு காரணமாகத்தான் என் மகள் உயிரிழந்தார்” என்று கூறியிருந்தார்.

இது போல் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையேயான சமநிலையைப் பராமரிக்க (Work Life Balance) பல உலக நாடுகள் விதிமுறைகள் வகுத்துள்ளன.

உதாரணத்திற்கு நியூசிலாந்தில் வருடத்திற்கு 32 நாட்கள் கட்டாய விடுமுறைகள் மற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறைகள் உள்ளது. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் ஒரு வாரத்தில் ஊழியர்கள் சராசரியாக 36 மணி நேரம் தான் வேலை செய்கிறார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் அலுவலகமான யூரோஸ்டாட்(Eurostat) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று(நவம்பர் 14) சிஎன்பிசி நடத்திய குளோபல் லீடர்ஷிப் சம்மேளனத்தில்(Global Leadership Summit) கலந்துகொண்ட இன்ஃபோஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தியிடம் “நீங்கள் இதற்கு முன்னர் ஒரு மனிதர் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அந்த கருத்தில் தற்போதும் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது எதாவது மாற்றம் உண்டா?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நாராயண மூர்த்தி ” வொர்க் லைஃப் பேலன்ஸில்( Work Life Balance) எனக்கு நம்பிக்கை இல்லை. தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுயாதீன இயக்குநராக இருக்கும் கே.வி.காமத்திடம் 25 வருடங்களுக்கு முன்பு இதே கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு “வளர்ந்துவரும் ஏழை நாடான இந்தியா பல சவால்களைச் சந்தித்து வருகிறது. அதை சரியான முறையில் எதிர்கொள்வதில் தான் கவனம் இருக்க வேண்டுமே தவிர, மக்கள் வொர்க் லைஃப் பேலன்ஸ் பற்றி கவலைப் படக்கூடாது என்று கூறியிருந்தார்.

அதே தான் நானும் கூறுகிறேன். நம் நாட்டின் பிரதமர் 100 மணி நேரம் உழைக்கிறார். மத்திய அமைச்சர்களும், அரசு நிர்வாகிகளும் கடுமையாக உழைக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாம் ஏன் அப்படி உழைக்கக்கூடாது” என்று நாராயண மூர்த்தி பதிலளித்தார்.

மேலும் “1986 வருடத்தில் இந்தியா 6 நாள் வேலை வாரங்களிலிருந்து 5 நாள் வேலை வாரங்களுக்கு மாறின போது நான் ஏமாற்றம் அடைந்தேன். இந்தியாவில் கடின உழைப்புக்கு மாற்று இல்லை.

புத்திசாலியாக இருந்தாலும் கடினமாக உழைக்க வேண்டும். என் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.எனவே மன்னிக்கவும், நான் எனது பார்வையை மாற்றவில்லை” என்று நாராயண மூர்த்தி கூறினார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் மரணம் : உறவினர்கள் போராட்டம்!

செந்தில் பாலாஜி வழக்கில் தடைகோரி மனு : எச்சரித்த நீதிபதி!

புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: 21 வயது பழங்குடி எம்.பியின் கொந்தளிப்பால் அதிர்ந்த நியூசிலாந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share