senthilbalaji minister post case

செந்தில் பாலாஜி வழக்கில் தடைகோரி மனு : எச்சரித்த நீதிபதி!

அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 15) உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.அரவிந்த், அமைச்சர்செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிப்பதற்கு அதிகாரமில்லை என்றும், அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால், அதற்கு காரணமான அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ’எதன் அடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது?’ நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர், செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், ”விசாரணை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வழக்குக்கு தொடர்பில்லாத நபர் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை” என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ’மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்’ என  எச்சரித்தனர்.

இதனையடுத்து, மனுவை திரும்ப பெற்று கொள்வதாக மனுதாரர் கூறிய நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: 21 வயது பழங்குடி எம்.பியின் கொந்தளிப்பால் அதிர்ந்த நியூசிலாந்து

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற்றது என்.பி.பி!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Comments are closed.