இந்தியப் பொருளாதாரம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு நேற்று (டிசம்பர் 3, புதன்கிழமை) அரங்கேறியுள்ளது. வரலாற்றிலேயே முதல்முறையாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 என்ற தடையைத் (Mark) தாண்டியது. புதன்கிழமை வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 90.21 ஆகச் சரிந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஏன் இந்தத் திடீர் சரிவு? நேற்று காலை 89.96 என்ற அளவில் தொடங்கிய வர்த்தகம், மளமளவெனச் சரிந்து ஒரு கட்டத்தில் 90.30 வரை சென்றது. இறுதியில் 25 பைசாக்கள் சரிந்து 90.21-ல் நிலைபெற்றது. இந்தச் சரிவுக்குப் பொருளாதார நிபுணர்கள் அடுக்கும் முக்கியக் காரணங்கள் இதோ:
- அந்நிய முதலீடு வெளியேற்றம் (FII Outflow): வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து தங்கள் பணத்தைத் தொடர்ந்து வெளியே எடுத்து வருகின்றனர். நேற்று பங்குச்சந்தை சரிந்ததற்கும், ரூபாய் மதிப்பு விழுந்ததற்கும் இதுவே முக்கியக் காரணம்.
- கச்சா எண்ணெய் விலை: சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை (Crude Oil Price) நிலையாக இருப்பதும், அதற்கான தேவை அதிகரித்துள்ளதும் ரூபாயின் மீது அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது. இறக்குமதியாளர்கள் டாலரை அதிக அளவில் வாங்கியதால் ரூபாயின் மதிப்பு குறைந்தது.
- இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பில் நிலவும் இழுபறி, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி வேடிக்கை பார்த்ததா? வழக்கமாக ரூபாய் மதிப்பு சரியும்போது ரிசர்வ் வங்கி (RBI) டாலரை விற்று ரூபாயைத் தூக்கி நிறுத்தும். ஆனால், நேற்று வர்த்தகத்தின் பெரும்பகுதி நேரத்தில் ஆர்பிஐ பெரிய அளவில் தலையிடவில்லை. ரூபாய் மதிப்பு 90.30-ஐ தொட்ட பிறகே ரிசர்வ் வங்கி சிறிதளவு தலையிட்டதாகத் தெரிகிறது. “ரிசர்வ் வங்கி வேண்டுமென்றே ரூபாயை 90-ஐ தாண்ட அனுமதித்தது போல் தெரிகிறது” என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சாமானியனுக்கு என்ன பாதிப்பு? “டாலர் ஏறினா நமக்கென்ன?” என்று நினைக்காதீர்கள். 1 டாலர் = 90 ரூபாய் என்பது நம் பர்ஸை நேரடியாகப் பாதிக்கும்.
- பெட்ரோல்/டீசல்: இந்தியா தனது எரிபொருளில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலவு கூடும். இது பெட்ரோல் விலை உயர்வில் முடியலாம்.
- விலைவாசி: வெளிநாடுகளிலிருந்து வரும் எலக்ட்ரானிக் பொருட்கள், மொபைல் போன்கள் மற்றும் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கலாம்.
- கல்விச் செலவு: வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இனி கல்விக் கட்டணம் மற்றும் செலவுகள் அதிகரிக்கும். பெற்றோர்களுக்கு இது கூடுதல் சுமை.
அடுத்தது என்ன? அமெரிக்க ஃபெடரல் வங்கி டிசம்பரில் வட்டி விகிதத்தைக் குறைத்தால் மட்டுமே ரூபாய்க்குச் சிறிது ஆசுவாசம் கிடைக்கும். அதுவரை ரூபாயின் மதிப்பு 89.80 முதல் 90.50 வரை ஆட்டம் காணும் என்றே கணிக்கப்படுகிறது.
