விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு மணி மண்டபத்தை பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஜனவரி 17-ந் தேதி திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “நமது Dravidian Model அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்தோம்!
அதன் தொடர்ச்சியாக, பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தைத் திறந்து வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரனார்
பரமக்குடி அருகே உள்ள செல்லூரில் அக்டோபர் 9, 1924 அன்று வேதநாயகம் வாத்தியார் மற்றும் ஞானசவுந்தரி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தமது இளமைக்காலத்திலேயே சுதந்திர வேட்கையுடனும் சமூக நீதியுடனும் வளர்ந்த அவர், 18 வயதிலேயே ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். தேசபற்றுடன் இந்திய ராணுவத்தில் அவில்தாராகப் பணியாற்றிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக சமூகப் பணி செய்ய ராணுவப் பணியைத் துறந்தார்.
1950 ஆம் ஆண்டில், “ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கி, தீண்டாமைக்கு எதிராகவும், சாதியப் பாகுபாட்டிற்கு எதிராகவும் தீவிரமாகப் போராடினார். ராஜாஜியின் சர்ச்சைக்குரிய குலக்கல்வி திட்டத்திற்கு எதிராகவும், கிராமப்புறங்களில் நிலவிய இரட்டை குவளை முறைக்கு எதிராகவும் அவர் போராடினார். இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து காமராஜரின் ஆதரவைப் பெற்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார்.
1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரனார், ஜாதி வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலையைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட முதுகுளத்தூர் கலவரம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகப் பதிவானது.
