மழைக்காலம் வந்தாலே பல வீடுகளில் ஒரு பொதுவான பிரச்சினை உருவாகும். அதுதான் துணிகளில் இருந்து வரும் ஈரமான துர்நாற்றம் (Musty Smell). அதிக ஈரப்பதம், சூரிய ஒளி இல்லாமை மற்றும் துணிகள் முழுமையாக உலராதது போன்ற காரணங்களால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ந்து, ஆடைகளில் விரும்பத்தகாத நாற்றம் ஏற்படுகிறது. ஆனால், சில எளிய பழக்கங்களைப் பின்பற்றினால் இந்தப் பிரச்சினையை எளிதாகத் தவிர்க்கலாம்.
வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள்
துணிகளைத் துவைக்கும் போது, டிடர்ஜெண்டுடன் அரை கப் வெள்ளை வினிகர் அல்லது பேக்கிங் சோடா சேர்த்தால், துணியில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்க உதவும். இவை துர்நாற்றத்தை மறைப்பதற்குப் பதிலாக, அதற்குக் காரணமான கிருமிகள் மற்றும் படிந்த அழுக்குகளை அகற்றவும் உதவுகின்றன. துவைத்த பிறகு வினிகர் வாசனை துணியில் தங்காது.
அழுக்குத் துணிகளை குவித்து வைக்காதீர்கள்
வியர்வை படிந்த துணிகளை பல நாட்கள் லாண்ட்ரி கூடையில் குவித்து வைத்தால், துர்நாற்றம் மேலும் அதிகரிக்கும். மழைக்காலத்தில் துவைக்க தாமதமானாலும், அழுக்குத் துணிகளை காற்றோட்டமான இடத்தில் தனித்தனியாக தொங்கவிடுவது நல்லது. இதனால் ஈரப்பதம் குறைந்து, கடுமையான நாற்றம் உருவாகாமல் தடுக்கலாம்.
துவைத்த பிறகு முழுமையாக உலர்த்துங்கள்
மழைக்காலத்தில் துணிகள் மெதுவாக உலரும். எனவே, சூரிய ஒளி இல்லாவிட்டாலும், நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் உலர்த்துங்கள். மின்விசிறி அல்லது டிஹ்யூமிடிஃபையர் (Dehumidifier) பயன்படுத்தினால் உலரும் வேகம் அதிகரிக்கும். முழுமையாக உலராத துணிகளை அலமாரியில் வைப்பது பூஞ்சை மற்றும் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.
அலமாரியையும் உலர்வாக வைத்திருங்கள்
சுத்தமாகத் துவைத்த துணிகளுக்கும் அலமாரியில் துர்நாற்றம் வரலாம். காரணம், அலமாரிக்குள் இருக்கும் ஈரப்பதம். இதைத் தவிர்க்க சிலிகா ஜெல் பைகள், பேக்கிங் சோடா அல்லது ஈரப்பதத்தை உறிஞ்சும் பொருட்களை அலமாரியில் வைக்கலாம். அவ்வப்போது அலமாரியைத் திறந்து காற்றோட்டம் ஏற்படுத்துவதும் நல்லது.
வாஷிங் மெஷினையும் சுத்தமாக வைத்திருங்கள்
பல நேரங்களில் துர்நாற்றத்திற்கு காரணம் துணிகள் அல்ல, வாஷிங் மெஷின் ஆக இருக்கலாம். மெஷினுக்குள் பூஞ்சை அல்லது சோப்பு படிவங்கள் இருந்தால், புதிதாகத் துவைத்த துணிகளுக்கும் நாற்றம் பரவலாம்.
எனவே, வாஷிங் மெஷினை தவறாமல் சுத்தம் செய்வதுடன், துவைத்த உடனேயே துணிகளை வெளியே எடுத்து உலர்த்தும் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
