பதற்றம் என்பது வெறும் பயமல்ல
ஒரு உறவில் அன்பு, நம்பிக்கை, புரிதல் ஆகியவை முக்கியமானவை.
ஆனால், துணைகளில் ஒருவருக்கு தொடர்ந்து பதற்றம் (Anxiety) இருந்தால், அந்த உறவில் சிறிய விஷயங்கள்கூட பெரிய பிரச்சினையாக மாறலாம்.
மெசேஜுக்கு தாமதமாக பதில் வந்தாலோ, திட்டமிட்ட சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டாலோ, காரணமில்லாமல் ஏதோ மோசமானது நடக்கப் போகிறது என்ற எண்ணம் அவர்களை ஆட்கொள்ளலாம்.
இது வேண்டுமென்றே செய்யப்படும் செயல் அல்ல; அவர்களின் மனநிலையின் ஒரு வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட சூழலில் “இவ்வளவு சின்ன விஷயத்துக்கா கவலை?” என்று கேட்பதற்குப் பதிலாக, அந்த உணர்வை புரிந்துகொள்ள முயற்சிப்பதே உறவை வலுப்படுத்தும் முதல் படியாக இருக்கும்.
முதலில் கேளுங்கள்; உடனே தீர்வு சொல்ல வேண்டாம்
பலருக்கு இருக்கும் இயல்பான பழக்கம், பிரச்சினை கேட்டவுடன் உடனே தீர்வு சொல்லத் தொடங்குவது.
ஆனால் பதற்றத்தால் அவதிப்படுபவர்களுக்கு, எல்லா நேரங்களிலும் ஆலோசனை தேவையில்லை. அவர்களுடைய உணர்வுகளை யாராவது கவனமாகக் கேட்பதே பெரிய ஆறுதலாக இருக்கும்.
“நீ கவலைப்படுவது எனக்குப் புரிகிறது”, “நான் உன்னுடன் இருக்கிறேன்” போன்ற எளிய வார்த்தைகள் கூட பாதுகாப்பு உணர்வை உருவாக்கும். மாறாக “அதை மறந்துடு”, “அவ்வளவு யோசிக்காதே” போன்ற வார்த்தைகள், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வை அதிகரிக்கக்கூடும்.
ஆதரவுக்கும் அளவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்
ஒருவருக்கு ஆதரவாக இருப்பது நல்ல விஷயம். ஆனால், அவர்களின் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் உங்கள் வாழ்க்கையையே முழுமையாக மாற்றிக்கொள்வது ஆரோக்கியமான தீர்வாக இருக்காது.
உதாரணமாக, நண்பர்களைச் சந்திப்பதை நிறுத்துவது, ஒவ்வொரு நிமிடமும் அழைப்பு அல்லது மெசேஜுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது போன்றவை ஆரம்பத்தில் உதவுவது போலத் தோன்றினாலும், நீண்ட காலத்தில் இருவருக்கும் சுமையாக மாறலாம்.
ஆதரவு என்பது “நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று சொல்லுவது. ஆனால், அவர்களின் ஒவ்வொரு பயத்திற்கும் ஏற்ப உங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்வது உறவையும், அவர்களின் தன்னம்பிக்கையையும் பாதிக்கலாம்.
உங்கள் மனநலத்தையும் கவனிப்பது ஏன் அவசியம்?
பதற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வாழும்போது, மற்றொரு துணையும் மனஅழுத்தத்தை அனுபவிக்க வாய்ப்பு உண்டு. எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், உணர்ச்சி ரீதியான சோர்வை ஏற்படுத்தலாம்.
அதனால் உங்கள் உணர்வுகளையும் மதிப்பது அவசியம். உங்களுக்குப் பிடித்த செயல்களில் நேரம் செலவிடுவது, நண்பர்களுடன் பேசுவது, தேவையான இடைவெளியை எடுத்துக்கொள்வது போன்றவை குற்ற உணர்வு இல்லாமல் செய்யக்கூடிய விஷயங்கள்.
ஒரு உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதில் இருக்கும் இருவரின் மனநலமும் முக்கியமானது.
எப்போது நிபுணரின் உதவியை நாட வேண்டும்?
பதற்றம் தினசரி வாழ்க்கையையும், வேலை, குடும்ப உறவுகள் அல்லது காதல் உறவையும் தொடர்ந்து பாதிக்கத் தொடங்கினால், மனநல நிபுணரின் உதவியைப் பெறுவது நல்ல முடிவாக இருக்கும்.
சிகிச்சை பெறுவது பலவீனத்தின் அறிகுறி அல்ல. மாறாக, பிரச்சினையை ஏற்றுக்கொண்டு அதைச் சமாளிக்க முன்வருகிற துணிச்சலின் அடையாளம்.
சிலருக்கு உளவியல் ஆலோசனை போதுமானதாக இருக்கலாம்; சிலருக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையும் தேவைப்படலாம்.
இருவரும் இணைந்து ஆலோசனையில் பங்கேற்பதும் உறவை மேலும் வலுப்படுத்த உதவலாம்.
ஒரு துணைக்கு பதற்றம் இருப்பது உறவின் முடிவு அல்ல. மாறாக, இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, பொறுமையுடனும் ஆரோக்கியமான எல்லைகளுடனும் பயணித்தால், அந்த உறவு இன்னும் வலுவாக மாறலாம்.
எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில், அருகில் இருந்து புரிந்துகொள்வதே மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். அன்பு மட்டுமல்ல, புரிதலும் ஒரு உறவை நீண்ட காலம் நிலைநிறுத்தும் முக்கியமான அடித்தளமாகும்.
