வீட்டில் இருக்கும் பழைய செம்புப் பாத்திரங்கள் நாளடைவில் தங்களுடைய பளபளப்பை இழந்து, பழுப்பு அல்லது பச்சை நிறக் கறைகளுடன் காணப்படுவது வழக்கம். இதற்காக விலையுயர்ந்த கிளீனர்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. சமையலறையில் இருக்கும் கெட்சப்பை வைத்தே இந்தக் கறைகளை அகற்றலாம்.
செம்பு ஏன் பச்சை நிறமாகிறது?
காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் செம்பு வினைபுரிவதால் முதலில் அதன் மேற்பரப்பில் சிவப்பு அல்லது பழுப்பு நிற ஆக்சைடு படலம் உருவாகிறது. தொடர்ந்து காற்று, ஈரப்பதம் மற்றும் சுற்றுச்சூழலுடன் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் சில நேரங்களில் இது பச்சை அல்லது நீலப்பச்சை நிறமாக மாறுகிறது.
தண்ணீர் பட்ட பிறகு சரியாகத் துடைக்காமல் விடுவதும் கறை உருவாவதை வேகப்படுத்தும்.
கெட்சப் எப்படி கறையை அகற்றும்?
கெட்சப்பில் இருக்கும் வினிகர் போன்ற அமிலக் கூறுகள், செம்பின் மேற்பரப்பில் படிந்துள்ள ஆக்சைடு மற்றும் கறைப் படலத்தை தளரச் செய்ய உதவுகின்றன.
கறை படிந்த பகுதியில் கெட்சப்பை மெல்லிய அடுக்காகத் தடவி, சிறிது நேரம் கழித்து மென்மையான மைக்ரோஃபைபர் துணியால் மெதுவாகத் தேய்க்கலாம். பின்னர் சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.
தேய்க்கும்போது இந்தத் தவறை செய்யாதீங்க!
கடினமான ஸ்கிரப்பர் அல்லது உலோகத் தேய்ப்பான்களை பயன்படுத்த வேண்டாம். அதிகமாக அழுத்தித் தேய்ப்பதும் செம்பின் மேற்பரப்பில் கீறல்களை ஏற்படுத்தலாம்.
மேலும், முழுப் பாத்திரத்திலும் பயன்படுத்துவதற்கு முன்பு கண்ணுக்குத் தெரியாத சிறிய பகுதியில் கெட்சப்பை வைத்து சோதித்துப் பார்ப்பது நல்லது.
சுத்தம் செய்த பிறகு பாத்திரத்தை முழுமையாக உலர்த்தி, ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்தால் மீண்டும் கறை படிவதை ஓரளவு தாமதப்படுத்தலாம்.
