டாட்டூ போட்ட பிறகு அதன் வடிவமும் நிறமும் நீண்ட காலத்துக்கு அப்படியே இருக்க வேண்டும் என்பதில் பலரும் கவனம் செலுத்துவார்கள்.
ஆனால், டாட்டூ போட்ட சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதிலும் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக சன்ஸ்க்ரீனை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.
புதிய டாட்டூவில் சன்ஸ்க்ரீன் கூடாது
டாட்டூ போட்ட உடனேயே சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது சருமத்துக்கு எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம். சிவத்தல், நீர்வடிதல், தோல் உரிதல் போன்றவை முழுமையாக நின்று, டாட்டூ பகுதி நன்றாக ஆறிய பிறகே சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும்.
வெயிலில் இருந்து எப்படி காப்பது?
டாட்டூ முழுமையாக குணமாகும் வரை நேரடியாக சூரிய ஒளி படுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
வெளியே செல்ல வேண்டிய சூழல் இருந்தால், டாட்டூ இருக்கும் பகுதியை துணியால் மூடி பாதுகாக்கலாம். டாட்டூ மீது படும் புறஊதாக் கதிர்கள் அதன் நிறத்தை மங்கச் செய்வதுடன் சருமத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
SPF 30 போதுமா?
டாட்டூ முழுமையாக ஆறிய பிறகு தினசரி பயன்பாட்டுக்கு SPF 30 சன்ஸ்க்ரீனை பயன்படுத்தலாம். அதிக நேரம் வெயிலில் இருக்க வேண்டியவர்கள் SPF 50 பயன்படுத்துவது நல்லது.
வாசனை அதிகம் இல்லாத லோஷன் அல்லது க்ரீமை தேர்வு செய்வது சரும எரிச்சலை குறைக்க உதவும். வெளியே செல்வதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பே சன்ஸ்க்ரீனை தடவி, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மீண்டும் பயன்படுத்தலாம்.
அரிப்பு வந்தால் அலட்சியம் வேண்டாம்
சன்ஸ்க்ரீன் பயன்படுத்திய பிறகு டாட்டூ பகுதியில் தொடர்ந்து அரிப்பு, தடிப்பு, சிவத்தல் அல்லது தழும்பு போன்ற மாற்றங்கள் தெரிந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக அலர்ஜி அல்லது சருமப் பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், தேவையானால் தோல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.
டாட்டூவை அழகாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதற்குக் கீழே இருக்கும் சருமத்தையும் பாதுகாப்பதே முக்கியம்.
