புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நோயாளிக்கு ஏற்றபடி உருவாக்கப்படும் mRNA தடுப்பூசி தொழில்நுட்பம் மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது.
‘Software in a Syringe’ என அழைக்கப்படும் இந்த அணுகுமுறையில், நோயாளியின் புற்றுநோய் செல்களில் இருக்கும் தனித்துவமான மரபணு மாற்றங்களை அடையாளம் கண்டு, அதற்கேற்ப தடுப்பூசி வடிவமைக்கப்படுகிறது.
‘Software in a Syringe’ என்றால் என்ன?
கணினி மென்பொருள் எப்படி குறிப்பிட்ட பணியைச் செய்ய வழிமுறைகளை வழங்குகிறதோ, அதுபோல mRNA தடுப்பூசி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு புற்றுநோய் செல்களை அடையாளம் காணும் தகவலை வழங்குகிறது.
இதில் வைரஸ் போன்ற உயிரியல் பொருளை செலுத்துவதற்குப் பதிலாக, செல்களுக்கு தேவையான மரபணு வழிமுறைகளை வழங்கும் mRNA பயன்படுத்தப்படுகிறது.
முதலில் நோயாளியின் மரபணு ஆய்வு
இந்த சிகிச்சை முறையில், நோயாளியின் புற்றுநோய் திசு மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு DNA/RNA வரிசைமுறை பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புற்றுநோய் செல்களில் காணப்படும் குறிப்பிட்ட பிறழ்வுகள் கண்டறியப்படுகின்றன.
அந்தத் தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நோயாளிக்காக தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
T-செல்களுக்கு ‘பயிற்சி’ கொடுக்கும் தடுப்பூசி
உடலுக்குள் செலுத்தப்படும் mRNA, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் T-செல்களுக்கு புற்றுநோய் செல்களை அடையாளம் காண உதவும் தகவலை வழங்குகிறது. இதன் மூலம் மறைந்திருக்கும் புற்றுநோய் செல்களை கண்டுபிடித்து தாக்கும் திறனை நோய் எதிர்ப்பு மண்டலம் பெறுகிறது.
கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளைப் போல ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படாமல், புற்றுநோய் செல்களை குறிவைப்பதே இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
இன்னும் ஆய்வு நிலையில்தான்…
மெலனோமா, கணையம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகைகளுக்கான மருத்துவப் பரிசோதனைகளில் இந்த தொழில்நுட்பம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. BioNTech, Moderna உள்ளிட்ட நிறுவனங்களும் தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
எனினும், இது இன்னும் மருத்துவப் பரிசோதனை கட்டத்திலேயே உள்ளது. எனவே, பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி என இதை தற்போது கருத முடியாது.
