பாரசீக உணவுகளில் பிரபலமானது பார்சி சிக்கன் கறி. விழாக்களிலும் விருந்துகளிலும் முக்கிய உணவாகப் பரிமாறப்படும் இந்த பார்சி சிக்கன் கறியை உங்கள் வீட்டிலேயே செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
சிக்கன் – கால் கிலோ
பச்சை மிளகாய் – 4
வெங்காயம், தக்காளி – ஒன்று
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா கலவைக்கு…
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
பட்டைத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
உருளை சிப்ஸ் செய்ய…
உருளைக்கிழங்கு – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கைத் தோல் சீவி கழுவி, கேரட் துருவலில் துருவவும். பிறகு தண்ணீரில் அலசி, பேப்பர் டவலில் போட்டு அரை மணி நேரம் ஈரம் போக உலரவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு நன்கு உலர்ந்த உருளைத் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்தெடுக்கவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இதுவே உருளைக்கிழங்கு சிப்ஸ். மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் வெங்காயம் சேர்த்துக் கிளறி, பிறகு தக்காளி விழுது, மசாலா கலவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேகவிட்டு இறக்கவும். மேலே உருளைக்கிழங்கு சிப்ஸ் கலவையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
