பாக்யராஜ், ராஜேஷ், வடிவுக்கரசி நடிப்பில் பாலகுரு இயக்கத்தில் 1979-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கன்னிப்பருவத்திலே’. தயாரித்தவர் ராஜ்கண்ணு. பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் படங்களின் தயாரிப்பாளரும் இவர்தான்.
பொதுவாக நடிகைகள் பெயர் பாடல்களில் வரும் (பானுமதி மேவி வரும், நதியா நதியா நைல் நதியா, மீனம்மா மீனம்மா, கூடையில் என்ன குஷ்பூ, ராதா என் ராதா வா ராதா.. இப்படி!)
ஆனால் ஒரு தயாரிப்பளார் பெயர் வந்தது ராஜ்கண்ணுவுக்குத்தான். கன்னிப்பருவத்திலே படத்தில் வந்த நடையை மாத்து பாடலில் ”அட ராஜ்கண்ணு..” என்ற பெயர் வரும்.
கன்னிப்பருவத்திலே படப்பிடிப்பில் பாக்யராஜ்தான் வடிவுக்கரசிக்கு நடிப்பு எல்லாம் சொல்லி கொடுப்பார். எனவே பாக்யராஜும் வடிவுக்கரசியும் இயல்பான நண்பர்களாக இருந்தார்களாம்…
தினசரி வடிவுக்கரசிக்கு மட்டும்தான் கார் வரும். பாக்கியராஜ் உள்பட எல்லோரும் வேனில்தான் வந்து போவார்கள்.
வடிவுக்கரசி காரில் கொஞ்ச தூரம் போய்விட்டு கரை நிறுத்தி, பாக்யராஜை வேனில் இருந்து இறங்க சொல்லி காரில்ஏற்றுக் கொள்வாராம். இதை வைத்து வடிவுக்கரசியும் பாக்கியராஜும் காதலித்துக் கொண்டு இருப்பதாக ராஜ்கண்ணுவிடம் யாரோ தவறாக போட்டுக் கொடுத்து விட்டார்கள்.
“ஓகே.. இந்த செய்தி கிசுகிசுவாக வந்தது. அவ்வளவுதானே?” என்கிறீர்கள்தானே? அப்படி வந்திருந்தால் பரவாயில்லையே.
ஒருநாள் பாக்யராஜை கிணற்றில் தள்ளிவிடும் காட்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தார்.
வந்தவர் பாக்யராஜை அழைத்து கன்னா பின்னா என்று திட்டினார். ‘என் காசில் எல்லோரும் ஹனிமூன் கொண்டாடுகிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதைக் கேட்டதும் வடிவுக்கரசிக்கு கோபம் வந்து நாற்காலியை எடுத்து தூக்கி எறிந்திருக்கிறார்.. கோபம் குறையாமல் கத்தி இருக்கிறார் வடிவுக்கரசி.
உடனே வடிவுக்கரசிக்கு பேய் பிடித்தது என்று சொல்லி விட்டார்கள்.
அது மட்டுமல்ல மறுநாள் செய்தித்தாளில் வந்த செய்தி… வடிவுக்கரசிக்கு பேய் பிடித்திருக்கிறது!
யப்பா.. இப்ப உள்ள ஆளுங்க எல்லாம் எவ்வளவோ பரவால்லடா சாமி!
–ராஜதிருமகன்
.
