தமிழ் சினிமாவே கதைப் பஞ்சத்தில் தறிகெட்டு அலைந்து கொண்டிருக்கிறது . ஆனால் கே.பாக்யராஜ்?
இப்போதும் நொடிக்கு நூறு கதை சொல்வார் போலிருக்கிறது.
மாண்புமிகு பறை என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த பாக்கியராஜ் . அந்தப் படம் ஆணவக் கொலைகள் பற்றிய படம் என்பதால் தனது சின்ன வயசில் தான் பார்த்த ஆணவக் கொலை சம்பவம் ஒன்றை பற்றிச் சொன்னார் .
“எங்க ஏரியாவுல ஒரு பொண்ணு தன்னை விட சாதாரணமான ஜாதி பையனை லவ் பண்ணிடுச்சி. பொண்ணு வீட்டு ஆட்களுக்கு அவமானமா போயிடுச்சு . உடனே பொண்ணோட அப்பா கடைக்குப் போய் விஷம் வாங்கிட்டு வந்தாரு. அவரு, அவரோட மனைவி, லவ் பண்ண பொண்ணு, லவ் பண்ண பொண்ணோட தம்பியான ஒரு சிறுவன்.. நாலு பேருக்கும் சாப்பாட்டுல விஷம் கலந்தாரு.
எல்லார் முன்னாடியும் அவங்க அவங்க பங்கை வச்சாரு . அந்தப் பொண்ணைப் பாத்து, ‘உன்னால எங்களுக்கு அவமானம் ஆச்சு. அதனால நீ சாப்பிட்டு செத்துடு. இல்லன்னா நீ உயிரோட இரு . நான் உங்கம்மா உங்க தம்பி மூணு பேரும் சாப்பிட்டுட்டு செத்துருவோம்.’ ன்னு சொன்னாரு. தம்பியைப் பார்த்த அந்தப் பொண்ணு, அது மட்டும் சாப்பிட்டுட்டு போய் படுத்துருச்சு. காலைல பொணமா கிடந்தது ” என்று சொன்னவர் தொடர்ந்து ,
“இப்போ இங்கே வந்து இந்தப் படம் என்ன இந்தக் கதைன்னு தெரிஞ்சுக்கிட்டப்போ, எனக்கு இந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது . அப்படியே யோசிச்சு பார்த்தா ..
அந்தப் பொண்ணு அப்பா அம்மா மூணு பேரையும் விட்ருவோம். அந்த சின்ன பையனோட நிலையை யோசிச்சு பாருங்க . அப்பா அப்படி சொல்லும்போது அந்தப் பையனுக்கு எப்படி இருந்திருக்கும்? அக்காவைப் பொணமா பாக்கும்போது அவனுக்கு எப்படி இருந்திருக்கும் .
இப்போ அதை வச்சு ஒரு கதை பண்ணுவோம்.
படிச்சவன் – படிக்காதவன் , ஏழை – பணக்காரன், இந்த சாதி – அந்த சாதி , இந்த மொழி – அந்த மொழின்னு பேதம் இல்லாம, பல கணவன் மனைவி கொல்லப்படறாங்க. என்ன காரணம் னு புரியாம போலீஸ் முழிக்குது .
ஒரு நிலையில கண்டு பிடிக்கறாங்க. செத்துப் போன கணவன் மனைவி ஜோடி எல்லாருமே தன் பிள்ளைகளை அல்லது சகோதரிகளை ஆணவக கொலை பண்ணவங்க . நான் சொன்ன சம்பவத்தால பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருத்தன் பெரிய ஆளாகி , இந்த மாதிரி ஆணவக் கொலை செய்யும் பெற்றோர்கள் உறவுகளை கொல்றான்னு ஒரு கதை தோணுது .
இதை எதுக்கு சொல்றேன் னா ஒரு கதையை உண்மை சம்பவத்தில் இருந்து எப்படி உருவாக்கணும்னு அசிஸ்டன்ட் டைரக்டர்கள் தெரிஞ்சுக்கதான் சொல்றேன் ” என்று முடித்தபோது , கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது .
இவர் சும்மா ஆடியோ லாஞ்சுக்கு வந்து அஞ்சு நிமிஷத்துல ஒரு ஸ்கிரிப்ட் சொல்றாரு . நிறைய பய புள்ளைக ஷூட்டிங் முடிக்கிற வரைக்குமே கதை யோசிக்கிறது இல்ல.
சும்மாவா திரைக்கதை மன்னன் என்று சொன்னார்கள்?
பின் குறிப்பு ; யாரும் இந்தக் கதையை காப்பி அடிக்க நினைக்க வேண்டாம். சிக்கிடாதீங்க.
— ராஜ திருமகன்
