பாக்கெட் உணவுகளில் சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு அதிகமாக இருந்தால், அதை நுகர்வோருக்கு தெளிவாகத் தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை லேபிள் கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சத்துகள் அதிகமாக இருந்தால் மட்டுமே எச்சரிக்கையா?
உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் எச்சரிக்கை லேபிள் வைப்பது தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI புதிய விதிமுறையை முன்வைத்துள்ளது. முதல் கட்டத்தில், ஒரு பொருளில் சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு ஆகியவற்றில் குறைந்தது இரண்டு சத்துகள் அதிகமாக இருந்தால் மட்டுமே சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை குறியீடு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள 3S and Our Health Society, ஒரு பொருளில் சர்க்கரை மட்டும் அதிகமாக இருந்தாலும் எச்சரிக்கை லேபிள் இடம்பெற வேண்டும் என்று கோரியுள்ளது.
இரண்டாம் கட்டத்துக்கு காலக்கெடு நிர்ணயிக்க கோரிக்கை
செப்டம்பர் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அனைத்து விதிகளையும் ஒரே கட்டமாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நடைமுறைக்கு உறுதியான காலக்கெடு இல்லாவிட்டால், அது காலவரையின்றி தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதாகவும் மனுதாரர் தரப்பு கூறியுள்ளது.
மேலும், சேர்க்கப்படும் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு மட்டுமல்லாமல், உணவில் உள்ள மொத்த அளவையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
லேபிள்கள் பெரிதாக இருக்க வேண்டும்
பாக்கெட்டின் முன்பக்கத்தில் எச்சரிக்கை குறியீடு தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, அதன் அளவு மொத்த முன்பக்கப் பரப்பில் 15 முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என்பதும் மற்றொரு கோரிக்கையாக உள்ளது. இதன் மூலம் அதிக சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு உள்ள உணவுகளை வாங்கும் முன் நுகர்வோர் எளிதாக முடிவு எடுக்க முடியும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
