‘ஜனநாயகன்’ திரைப்பட சான்றிதழ் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் படதயாரிப்பு நிறுவனமாக KVN புரொடக்ஷன்ஸ் சார்பாக மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) முகுல் ரோத்தகி ஆஜராகக் கூடும்.
ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் இன்று ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா பெஞ்ச் முன்பாக மேல்முறையீட்டு மனுவை தணிக்கை வாரியம் தாக்கல் செய்துள்ளது. தணிக்கை வாரியம் சார்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராக உள்ளார்.
இந்த வழக்கில் ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் சார்பாக மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர்- அட்டர்னி ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடக் கூடும்.
யார் இந்த முகுல் ரோத்தகி
2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். நீதிபதி லோயா மர்ம மரண வழக்கில் அமித்ஷாவுக்காக ஆஜரானவர் முகுல் ரோத்தகி. அதே நேரத்தில் காங்கிரஸின் டிகே சிவகுமார், சச்சின் பைலட் வழக்குகளிலும் ஆஜரானவர்.
