முதல்வர் விஜய்யை சந்தித்து பேச தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா கண்ணு புறப்பட உள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அய்யா கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு இன்று (ஜூலை 27) போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த சூழலில் திருச்சி மலர்சாலை, அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள வீட்டில் அய்யாக்கண்ணுவை போலீசார் காவலில் வைத்திருந்தனர்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் , விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒரு நாடு பலம் பொருந்திய நாடாக இருக்க வேண்டும் என்றால் உணவு உற்பத்திக்காக வெளிநாட்டில் கையேந்தாமல் இருக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை கொடுப்பதில்லை.
ஒரு காலத்தில் ஒரு டன் கரும்பு ரூ.90 விற்கும்போது, ஆசிரியரின் சம்பளமும் ரூ.90 ஆக இருந்தது. இன்று ஆசிரியருக்கு ரூ.1 லட்சம் சம்பளம் இருக்கும் நிலையில், கரும்பு விலை ரூ.3,500 மட்டுமே என்று குறிப்பிட்டார்.
அரசு ஊழியர்களுக்கு 100 ரூபாய் சம்பளம் உயர்த்தினால் விவசாயிகளுக்கு 10 ரூபாயாவது உயர்த்த வேண்டும். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் உயர்த்துவதால் எந்த பலனும் இல்லை
காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகள் தொடர்பான மனுவை முதலமைச்சரிடம் அளிப்பதற்காக இன்று காலை 4 மணிக்கு புறப்பட இருந்தோம். ஆனால் காவல்துறையினர் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் டி.ஜி.பி அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அமைதியான முறையில் முதலமைச்சரைச் சந்தித்து மனு அளிக்கச் செல்ல உள்ளோம். இடையில் எந்த போராட்டமும் நடத்த திட்டம் இல்லை’ என்று கூறினார்.
