தமிழகத்தின் இளம் மேயரான சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சமூக வலைதளங்களில் சிலர் தனக்குத் தொல்லை கொடுத்து வருவதாகச் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் அமல்ராஜை நேரில் சந்தித்து மேயர் பிரியா இப்புகார் மனுவை அளித்தார்.
அந்த மனுவில், “அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். எனது புகைப்படங்களைத் தவறாகச் சித்தரித்தும், நான் பேசிய வீடியோக்களைத் தவறான முறையில் எடிட் செய்தும் அவதூறு பரப்பி வருகின்றனர். மேலும், எனது அலுவலகத் தொடர்பு எண்ணிற்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மேயர் பிரியா அளித்துள்ள இந்தப் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
