தேசிய தேர்வு முகமையை (National Testing Agency) சீரமைப்பதற்கான பன்னோக்கு வல்லுநர் குழுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று ஜூலை 26-ந் தேதி தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறி உள்ளதாவது: தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வுகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும், தொழில்நுட்ப ரீதியாக அதனை மேம்படுத்தவும் பன்னோக்கு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவுக்கு இன்போசிஸ் (Infosys) நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி தலைமை வகிப்பார்.
- இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத்
- புலனாய்வுத்துறை (IB) முன்னாள் இயக்குநர் தபன் டேகா
- ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி.காமகோடி
- முன்னாள் கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால்
- வல்லுநர் அம்ரித் லால் மீனா ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
பொதுத் தேர்வு முறையை மிகவும் நம்பகமானதாக, வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றுவதே இக்குழுவின் முக்கிய நோக்கம்.
எதிர்காலத்தில் நடைபெறும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க கடுமையான தண்டனைகள், துரித விசாரணைகள் மற்றும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உள்ளடக்கிய ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை எதிர்த்து, நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாக மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.
இத்தகைய எதிர்ப்புகளின் எதிரொலியாக, இந்தியாவின் தேர்வு முறையை முழுமையாகச் சீரமைக்கவும், எதிர்காலத் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தவும் இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் இந்த குழுவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
