“நாட்டில் போராடுவதற்கு அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது; போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காகவே போலீஸ் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது” என்று உச்சநீதிமன்ற (Supreme Court) தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு கடுமையாக விளாசியுள்ளது.
நீட் வினாத்தாள் மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி ஜந்தர் மந்தர் தொடங்கி நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்களை மேற்கொண்டனர். போலீசாரின் அடக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இன்று ஜூலை 27-ந் தேதி விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு தெரிவித்த கருத்துகள்:
- அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிற உரிமையை அரசியல் சாசனம் வழங்கி இருக்கிறது.
- அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமைக்கு அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
- மக்களின் போராடும் உரிமையை மறுக்க முடியாது.
- போராட்டம் நடத்தப்படுகிறது; போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காகவே மட்டும் போலீசார் அத்துமீறி நடப்பதை நியாயப்படுத்த முடியாது.
- அப்படி அத்துமீறிய சம்பவங்களை விசாரிக்க வேண்டும்.
- போராட்டங்களின் போது காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.
- அமைதியான போராட்டங்களை நடத்த முறையான இடம் ஒதுக்கீடு செய்து தருவது உள்ளிட்ட சில நெறிமுறைகள் அவசியமானது.
- டெல்லிக்கு மட்டுமான பிரச்சனை இல்லை; இது நாடு தழுவியது.
- போராட்டம் நடத்தினாலே தடியடி நடத்த வேண்டும் என்பது அல்ல.
- இத்தகைய தருணங்களில் சுய கட்டுப்பாடு மிக முக்கியமானது;
இவ்வாறு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதும் நாளை செவ்வாய்க்கிழமை ஜூலை 28-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
