தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 19) ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, கலைஞர் கனவு இல்ல திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றியது தொடர்பாகவும் வீடுகளின் எண்ணிக்கையை குறைத்தது தொடர்பாகவும் குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகளின் தரம் குறித்து பேசினார்.
தொடர்ந்து நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில்,’ வீடு கட்டும் திட்டம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தரத்தைப் பற்றி பேசும்போது, நான் ஒன்று கேட்கிறேன்…. தென்பெண்ணை ஆற்றில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒரு பாலம் மூன்றே மாதத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதைப் பற்றி ஊரே பேசியது. இதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, “இதே கேள்வியை சகோதரர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கப்பட்டு அது சட்டப்பேரவைக் குறிப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பாலம் என்பது, கிராம சலை திட்டத்தின் மூலமாக தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்ட பாலம். 54 ஆயிரத்து 600 கன அடி நீர் வாங்கும் அளவுக்கு தான் கட்டப்பட்டது. அப்போது திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பெய்யாத ஒரு மழை பெய்தது. சொல்லப்போனால் திருவண்ணாமலை மலை சரிந்து 7 பேர் உயிரிழந்தனர். அப்படி ஒரு மழையை நாங்கள் பார்த்ததே இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் 50 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்த காரணத்தினால், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாம்பாறில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதன் காரணமாக ஒரே சமயத்தில் 3.5 லட்சம் கன அடி நீர் வந்ததால் தாங்கு திறன் இல்லாமல் பாலம் அடித்துக் கொண்டு சென்றது.
அது இயற்கையின் சீற்றம். எனவே டிசைன் இன்ஜினியர் மீது குறை சொல்ல முடியாது” என பதில் அளித்தார்.
உடனே எழுந்து பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அப்போது இந்த பாலம் தொடர்பான தகவல்களும் வெளியாகும்’ என்று குறிப்பிட்டார்.
