தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை உயர்வை 1 லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 19) அறிவித்தார். இந்நிலையில் லிட்டருக்கு குறைந்தது 7 ரூபாயாவது உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருக்கிறது. பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலை 35 ரூபாயிலிருந்து 36 ரூபாயாகவும், ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல.
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாததாலும், தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதாலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
