ஈரோட்டில் பெரியார் பிறந்த நாள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு என்ற செய்தி பரவிய நிலையில் அதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக இன்று செய்திகள் வெளியாகியது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை இன்று (செப்டம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோட்டில் வருகின்ற 17.09.2026-ம் தேதி நடைபெறவுள்ள தந்தை பெரியாரின் பிறந்த நாள் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு என்ற தவறான செய்தி தொலைகாட்சியில் வெளியானது. இன்று 14.09.2026-ம் தேதி ஈரோடு நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பாக வருகின்ற 17.09.2026-ம் தேதி காலை 10.30 மணிக்கு பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த ஈரோடு நகர காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர். காவல் துறையால் மேற்படி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.
