அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்திருக்கும் நிலையில் ‘போர்வாள்’ என்ற பெயரில் புதிய அதிகாரப்பூர்வ நாளிதழை எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், தமிழகத்தின் முக்கிய கட்சியான அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
அதிமுகவில் இருந்து எஸ்பி வேலுமணி சிவி சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் தான் புதிய நாளிதழை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழாக இருந்து வந்த நமது அம்மா மற்றும் ஜே நியூஸ் தொலைக்காட்சி ஆகியவை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இது மட்டும் இன்றி கடந்த சில நாட்களாக இந்த ஊடகங்களில் சி.வி சண்முகம் வேலுமணி தரப்புக்கு ஆதரவான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான் போர்வாள் என்ற நாளிதழை அறிமுகப்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதுகுறித்து அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளரின் அறிக்கைகள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது, கே.பி.முனுசாமி, தளவாய்சுந்தரம், ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
