அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இன்று (மார்ச் 25) சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி விரைந்துள்ளார். Edappadi Palanisamy meet amitshah
கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.
மேலும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று கூறிவருகிறார்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லிக்கு பறந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் நாம் விசாரித்தபோது, “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி தரப்பிடம் இருந்து அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டது. நேற்று (மார்ச் 24) இரவு தான் அமித்ஷாவை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது. நாங்களெல்லாம் சட்டமன்றத்திற்கு எடப்பாடி வருவார் என காத்திருந்தோம். அவர் அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு விரைந்துள்ளார்” என்கிறார்கள். Edappadi Palanisamy meet amitshah