ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
ஐபிஎல் 2022 தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து ராஜஸ்தானை பைனலுக்கு அழைத்துச் சென்றார்.
ஆனாலும் அதன்பின் நடைபெற்ற தென் ஆப்ரிக்க தொடரில் அவரை தேர்வுக்குழு புறக்கணித்ததால் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
சஞ்சு சாம்சன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் என்று நிரூபித்தார்.

அதனால் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அதற்கு முன்பாக நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க டி20 தொடரிலும் சேர்க்காதது ரசிகர்களை கோபமடைய வைத்தது.
அதனால் ரசிகர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சில வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பினாலும் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் , டி20 அணியை பொறுத்தவரை பெயரை பார்க்காமல் திறமையை பார்த்து வாய்ப்பளிக்க வேண்டுமென முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்:
சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் “இந்தியா நட்பு ரீதியில் வீரர்களை தேர்வு செய்யக்கூடாது. இதுவரை ரிஷப் பண்ட் சிறந்த டி20 வீரராக தோன்றவில்லை.
அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அதிகமாகப் பொருந்தக்கூடியவர். அவரை விட சஞ்சு சாம்சன் சிறந்தவர். ஏனெனில் சமீப காலங்களில் ரிஷப் பண்ட் செயல்பாடுகள் சுமாராக உள்ளது”

அத்துடன் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் ஏற்கனவே உள்ளதால் சாம்சன் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்க தகுதியுடையவர்.
2020இல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடிய போது அவர் நம்மை கவரும் வகையில் செயல்பட்டார். அவருடைய பேட்டிங் ஸ்டைலுக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சிறப்பாகப் பொருந்தும்.
பண்ட் நல்ல வீரர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் தற்சமயத்தில் அவர் இந்திய டி20 அணியில் இடம் பெற சரியானவரல்ல” என்று கூறினார்.
மேலும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறாதது பற்றி “ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தால் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டிருப்பார்.
இருப்பினும் டி20 உலக கோப்பையில் அவர் தேர்வு செய்யப்படாததால் இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பளித்து அதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் தேர்வுக்குழுவுக்கு அதிகப்படியான அழுத்தம் ஏற்படும் என்பதால் கழற்றி விடப்பட்டுள்ளார்.
அதனால் தான் அவர் இந்தியா ஏ அணிக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சஞ்சு சாம்சனை உலக கோப்பையில் இந்தியா மிஸ் செய்யும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
