பெண்களை கைவிட்டுச் செல்கிறதா பெருமிதம் பேசும் ‘டிஜிட்டல் இந்தியா’? அதிர வைக்கும் புள்ளி விவரங்கள்!

Published On:

| By Minnambalam Desk

டிஜிட்டல் இந்தியாவில் பெண்கள்

R.கோபிநாத், முதன்மை விஞ்ஞானி, எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்

ன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள், டிஜிட்டல் மயமாக்கல், இணையம், கைப்பேசிகள், ஆன்லைன் தளங்கள் மற்றும் பயன்பாடுகள், மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் (ICTs) ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்தியாவில், இந்த வேகமான டிஜிட்டல் மாற்றம் ஆட்சி, நிதி, கல்வி, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் சேவைகள் வழங்கப்படும் முறையை மறுவடிவமைத்துள்ளது. இணைய இணைப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களின் விரிவாக்கம் தகவலுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளது, சேவைகள் வழங்கப்படுவதை எளிதாக்கியுள்ளது, வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது.

ஆனால், இவை அனைத்துத் தரப்பினருக்கும் சரிவிகித அளவில் கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது. ஏனெனில், பெண்கள் இந்த கருவிகளை எளிதாகவும் மலிவாகவும் அணுகும் வசதியை உறுதி செய்வதன் மூலம், அவர்களால் தகவல்கள், நிதி அமைப்புகள் மற்றும் அரசுத் திட்டங்களைத் தன்னிச்சையாகப் பயன்படுத்த உதவுகிறது.

ADVERTISEMENT

நடைமுறையில், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் இணைய வசதிகளை பெறுவது, அவற்றை பயன்படுத்துவது மற்றும் ICT திறன்களில் உள்ள வேறுபாடுகள் தொடர்ந்து காணப்படுகின்றன; இதனால் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே பாலின டிஜிட்டல் பாகுபாடு உருவாகியுள்ளது. இந்த டிஜிட்டல் பாகுபாட்டின் இரண்டு முக்கிய அம்சங்கள் பாலினம் மற்றும் இருப்பிடம் சார் சமத்துவமின்மை (கிராமப்புறம் – நகர்ப்புறம்) ஆகும்.

டிஜிட்டல் வளர்ச்சி மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கினாலும், சமீபத்தில் வெளிவந்திருக்கும் புள்ளிவிவரங்கள் பெண்களின் டிஜிட்டல் சுதந்திரம், அவர்களுக்கு மொபைல் சாதனங்கள், இணையம் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவுக்கான அணுகலை அதிகரிப்பது முக்கியம் என்பதை உணர்த்துகின்றன. அதே போல, நகர்ப்புற மக்களுடன் ஒப்பிடும்போது, கிராமப்புற மக்களின் டிஜிட்டல் பங்கேற்பு குறைந்த அளவில் உள்ளது.

ADVERTISEMENT

டிஜிட்டல்மயமாக்கல் பயனுள்ளதாக இருக்க, ஸ்மார்ட்போன் மற்றும் இணையத்திற்கான அணுகல் மட்டும் போதுமானதல்ல; அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவதற்கான திறன்களும் மக்களுக்குத் தேவை. தனிநபர்களுக்கு மொபைல் போன் அல்லது இணையத்திற்கான அணுகல் இருந்தாலும், மின்னஞ்சல் அனுப்புதல், மின்னணு ஆவணங்களை உருவாக்குதல் அல்லது இணையவழி நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய டிஜிட்டல் செயல்பாடுகளைச் செய்வதற்குத் தேவையான திறன்கள் அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

எனவே, உண்மையான ‘டிஜிட்டல் உள்ளடக்கம்’ என்பது தொழில்நுட்பத்திற்கான அணுகலை மட்டுமல்லாமல், அதை திறம்படவும், தன்னிச்சையாகவும், பயனுள்ள முறையிலும் பயன்படுத்தும் திறனையும் சார்ந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட விஷயங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக சமீபத்தில் வெளிவந்த தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS) 80-வது சுற்றின் கீழ், தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (NSO) நடத்தப்பட்ட தொலைத் தொடர்பு குறித்த விரிவான ஆய்வு- (Comprehensive Modular Survey: Telecom) 2025 புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வு 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே கைபேசி வைத்திருப்போர், அதன்மூலம் இணையப் பயன்பாடு,  இணையத்தைப் பயன்படுத்தும் திறன்கொண்ட நபர்கள் இணையத்தைப் பயன்படுத்தாததற்கான காரணங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ICT திறன்கள், மின்னஞ்சல்களை அனுப்புதல் அல்லது பெறுதல் மற்றும் இணையவழி நிதிப் பரிவர்த்தனை ஆகியவற்றைப் பற்றி கூறுகிறது.

அனைத்து தரவுகளும் இந்த ஆய்வின் கீழ் சேகரிக்கப்பட்ட சுயமாகத் தெரிவிக்கப்பட்ட பதில்களை அடிப்படையாகக் கொண்டவை; மேலும், ICT திறன்கள் நடைமுறைச் சோதனை மூலம் மதிப்பிடப்படவில்லை. அதோடு கணக்கெடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில், இதன் முடிவுகளை மாநில அளவில் பிரித்து பார்க்கக் கூடாது, இந்திய அளவில் ஒட்டுமொத்தமாகத்தான் பார்க்கவேண்டும் என்று அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளது.

BharatNet, PMGDISHA, Aadhaar, UPI மற்றும் DigiLocker போன்ற அரசுத் திட்டங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் அணுகலைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தி விரிவுபடுத்தியுள்ளன. இந்த முயற்சிகள் இணைய இணைப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில் முன்னேற்றங்களுக்கு பங்களித்துள்ளன; இருப்பினும், இந்த டிஜிட்டல் உள்ளடக்கத்தின் அளவீடுகள் பெரும்பாலும் உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த பரப்பில் கவனம் செலுத்துகின்றன. அனைத்து குழுக்களும், குறிப்பாக பெண்களும், டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவது சுயமாகவும், அதற்கான திறன்களும் பெற்றுள்ளனரா என்பதில் குறைவான கவனம் செலுத்தப்படுகிறது. இதன் விளைவாக, இணைய இணைப்பில் ஏற்படும் முன்னேற்றங்கள் எல்லோருக்கும் அதிகாரமளிப்பதாக மாறுவதில்லை.

1.  கை பேசி வைத்திருப்பவர்கள்

டிஜிட்டல் பாகுபாடு என்பது இணைய உபயோகிப்பிற்கு முன்பே, கை பேசிகளை வைத்திருப்பதிலிருந்தே தொடங்குகிறது.

  • இந்தியாவில் 83.9% ஆண்கள்; 56.2% பெண்கள் கை பேசி வைத்துள்ளனர்.
  • டிஜிட்டல் பிளவு என்பது, 27.7 சதவீதப் புள்ளிகள் (pp) தற்போது உள்ளது.
  • அதாவது, கிட்டத்தட்ட 4 பெண்களில் 2 பேர் கை பேசி வைத்திருக்கவில்லை. இந்த இடைவெளி கிராமப்புறங்களில் 32.3 pp ஆக சராசரியைவிட அதிகமாக உள்ளது (புள்ளிவிவரங்கள் வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது).

எனவே, கிராமப்புறப் பெண்கள் கிட்டத்தட்ட பாதி பேர், தகவல்களைப்பெற தங்கள் ஆண் சகாக்களைச் சார்ந்துள்ளனர். நகர்ப்புறங்களில் இந்த இடைவெளி 18.2 pp ஆகக் குறைவாக இருந்தாலும், அனைத்து துறைகளிலும் இந்த இடைவெளி தொடர்கிறது.

இதன் விளைவாக, கைபேசி செயலிகள் அல்லது குறுந்தகவல்கள் (SMS) மூலம் வழங்கப்படும் அரசு திட்டங்கள் குறித்த தகவல்கள், பெண்களில் கிட்டத்தட்ட பாதிப்பேருக்கு நேரிடையாக சென்றடைவதில்லை.

2.  இணையப் பயனாளர்கள்

 கைபேசி வைத்திருப்பது மட்டும் தகவல்களுக்கான முழுமையான அணுகலை வழங்காது. இந்திய அளவில், கை பேசி வைத்திருப்பவர்களில், 63.1% பெண்களும் 76.7% ஆண்களும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதிலும் 13.6 pp பாலின இடைவெளி காணப்படுகிறது. கிராமப்புறங்களில்,  சுமார் 57.6% பெண்கள் மட்டுமே, இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆண்களில் 72.1% இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்தமாக, நகர்ப்புறத்தோடு ஒப்பிடும்போது கிராமப்புற டிஜிட்டல் இடைவெளி, இணையத்தைப் பயன்படுத்துவதில்  14.5 pp என்ற அளவில் மிக அதிகமாக இருப்பது, அதிகமான சமத்துவமின்மையைக் காட்டுகிறது. நகர்ப்புறங்களில் இணையப் பயனர்களின் சதவீதம் அதிகமாக இருந்தாலும், 11.5pp இடைவெளி தொடர்கிறது.

இதனால், இணையதளங்கள், நலத்திட்ட விண்ணப்பங்கள், வேலைவாய்ப்புப் பதிவுகள் மற்றும் மின்-ஆளுகை சேவைகள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் நகர்ப்புற ஆண்களை அதிகமாகவும், கிராமப்புறப் பெண்களை மிகக் குறைவாகவும் சென்றடைகின்றன. 15pp கிராமப்புற–நகர்ப்புற இடைவெளி இருப்பதால், கிராமப்புற மக்கள் கட்டமைப்பு ரீதியாக விலக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் (மொத்தப் பயன்பாடு: கிராமப்புறம் 64.9%, நகர்ப்புறம்:79.9%).

இணையத்தைப் பயன்படுத்தும் திறன் இருந்தும், கடந்த மூன்று மாதங்களில் அதைப் பயன்படுத்தாதவர்களில், 40.6% பெண்கள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாததால் அதைப் பயன்படுத்தவில்லை என்று கூறுகின்றனர். இதனுடன் ஒப்பிடும்போது ஆண்களின் சதவீதம் 32.3% ஆகும்.

கிராமப்புறங்களில் பெண்களிடையே இது 45.6% ஆக அதிகரித்துக் காணப்படுகிறது. இது அணுகல் தொடர்பான பிரச்சினை அல்ல; இது செயல்பாட்டு எழுத்தறிவு இடைவெளியாகும். அதாவது, இணையத்தை சுயமாக இயக்குவதற்குத் தேவையான திறன்கள் இல்லாததால் உருவான நிலை. இணையச் சேவையின் செலவு அதிகமாக இருப்பதும், இணையத்தைப் பயன்படுத்துவதற்கு தடையாக இருப்பதாகவும் ஒருசிலர் குறிப்பிடுகின்றனர். கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற மக்களுக்கு இணையம் மிகவும் மலிவாக இருப்பதைக் குறிக்கிறது.

3. அடிப்படை ICT திறன்கள் – மின்னஞ்சலை அனுப்பும் அல்லது பெறும் திறன்.

உண்மையான டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு இணைய அணுகல் மட்டுமல்லாமல், செயல்பாட்டு ICT திறன்களும் அவசியம். நிபந்தனைக்குட்பட்ட மின்னஞ்சல் எழுத்தறிவு என்பது மின்னஞ்சலை அனுப்பக்கூடிய இணையப் பயனர்களின் பங்கைக் குறிக்கிறது. இது மக்கள்தொகையில் மறைந்திருக்கும் செயல்பாட்டு எழுத்தறிவின்மையின் ஒரு பகுதியை வெளிப்படுத்துகிறது. அனைத்து இணையப் பயனர்களிலும் 62.1% பேர் மட்டுமே மின்னஞ்சலை அனுப்ப அல்லது பெற முடிபவர்களாக இருக்கிறார்கள். இதில் கிராமப்புற பெண் பயனர்கள் 70% ஆகவும், கிராமப்புற ஆண் பயனர்களின் சதவீதத்தை விட அதிகமாகவும் உள்ளனர் என்பது வியப்பிற்கு உரியது. நகர்ப்புறப் பெண் பயனர்கள் 75% ஆக உள்ளனர். இதன் விளைவாக, மின்னஞ்சல் மூலம் உள்நுழைய, டிஜிட்டல் படிவங்களை நிரப்ப வேண்டிய அரசு இணையதளங்கள், மக்களுக்கு செயல்பாட்டு ICT திறன்கள் இருப்பதாகக் கருதுகின்றன.

4. இணைய வழி நிதிப் பரிவர்த்தனைகள்

இணையவழி நிதிப் பரிவர்த்தனைகளைப் பொறுத்த அளவில், ஆண்களை விட பெண்கள் UPI-ஐ அதிகமாகச் சார்ந்துள்ளனர். பெண் பயனர்களில் 84.0% பேர் UPI-ஐ பயன்படுத்துகின்றனர், ஆண் பயனர்களில் இது 79.9% ஆகும். ஆண்கள் UPI மற்றும் நெட் பேங்கிங் இரண்டையும் பயன்படுத்துவதற்கானவர்கள் அதிகம். ஆண் பயனர்களில் 19.6% பேர் இரண்டையும் பயன்படுத்துகின்றனர், அதேசமயம் பெண் பயனர்களில் இது 15.5% மட்டுமே. இந்தப் போக்கு கிராமப்புறங்களில் மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது. அங்கு UPI-ஐ மட்டும் பயன்படுத்தும் பெண்களின் சதவீதம் 89% ஆக உள்ளது, அதேவேளை ஆண்கள் UPI-யுடன் சேர்த்து இணையவழி பணப் பரிவர்த்தனையையும் அதிகமாக பயன்படுத்துகின்ன்றனர்.

UPI பயன்படுத்த எளிதானது மற்றும் செயலி அடிப்படையிலானது. நெட் பேங்கிங்கிற்கு இணையதளங்களில் வழிசெலுத்துதல், படிவங்களை நிரப்புதல் மற்றும் உள்நுழைவுத் தகவல்களை நிர்வகித்தல் ஆகியவை தேவைப்படுகின்றன. இதற்கு உயர்நிலை டிஜிட்டல் திறன்கள் அவசியம். பெண்களிடையே UPI பயன்பாடு அதிகமாக இருப்பது வெறும் விருப்பத்தை மட்டுமல்ல, திறன் தொடர்பான பிரச்சினையையும் பிரதிபலிக்கிறது.

இதன் பொருள், பெண்களுக்கான டிஜிட்டல் நிதி உள்ளடக்கம் உண்மையானதாக இருந்தாலும், அது பகுதியளவிலேயே உள்ளது. PMJDY-யுடன் இணைக்கப்பட்ட கணக்குகள் இருந்தாலும், அதை வைத்திருப்பவர் பரிவர்த்தனைகளுக்காக UPI-ஐ மட்டுமே பயன்படுத்துவதால், சிக்கலான நிதிப் பரிவர்த்தனைகள் அல்லது அரசு இணையதளங்களை சுயமாகப் பயன்படுத்த முடியாவிட்டால், அதன் பயன் குறைவாகவே இருக்கும்.

எனவே, ஒட்டுமொத்தமாக டிஜிட்டல் முறைகளின் மூலம் பெண்களின் திறன் மேம்பாடு ஊரகப் பகுதிகளிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கொண்டுவர கை பேசி பயன்பாடு என்று கூறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் டிஜிட்டல் பாகுபாட்டைப் போக்குவது மிக முக்கியமாகிறது.

உதாரணமாக, விவசாய முறைகளைப் பற்றிய செய்திகளை குறுந்தகவல்களாக தரும்போது அது அந்தக் குடும்பத்தில் உள்ள விவசாயம் செய்பவர்களை நேரிடையாக சென்றடைந்தால்தான் முழு பலனும் கிடைக்கும். அதற்கு இந்த டிஜிட்டல் இடைவெளியை குறைப்பது அவசியமாகிறது.  

கட்டுரையாளர் குறிப்பு

முதன்மை விஞ்ஞானி, வளர்ச்சித் துறை ஆய்வாளர், எம். எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி மையம்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share