திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (டிசம்பர் 29) 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1.5 லட்சம் திமுக மகளிர் அணியினர் பங்கேற்கும் மேற்கு மண்டல மாநாடு நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் அண்மையில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளின் வடக்கு மண்டல சந்திப்பு நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து திமுக மகளிர் அணியினர் 1.5 லட்சம் பங்கேற்கும் மேற்கு மண்டல மாநாடு இன்று பல்லடத்தில் நடைபெறுகிறது. ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி தலைமை வகிக்கிறார். இம்மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்புரையாற்றுகிறார்.
இம்மாநாட்டில்
திருப்பூர்
கோவை
நீலகிரி
ஈரோடு
கரூர்
நாமக்கல்
மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1.5 லட்சம் பெண்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
39 தொகுதிகளில்
வாக்குச் சாவடிக்கு 15 பேர் வீதம்
12,380 வாக்குச் சாவடிகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் பேர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
பல்லடம் காரணம்பேட்டையில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகளிர் அணியினருக்கு மாவட்டம் வாரியாக தனித்தனி வண்ணங்களுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அமர்வதற்கு என்று தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
மாநாட்டு திடல் முழுவதும் திமுக ஆட்சியில் மகளிர் நலனை முன்னிறுத்தி செய்த சாதனைகள்,நலத்திட்டஙகளை விளக்கும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இம்மாநாட்டில் பங்கேற்கும் பெண்களுக்கு குடிநீர், கழிப்பிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
