மத்தியில் ஆளும் பாஜக (BJP) அரசை திமுக (DMK) விரைவில் ஆதரிக்க கூடும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் நேற்று மே 24-ந் தேதி மாணிக்கம் தாகூர் கூறியதாவது: மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மாலை திமுக- அதிமுகவுக்கு ”கனெக்டிங் கால்” போட்டுவிட்டது பாஜக. இந்த தகவல் உடனடியாக எங்களுக்கு (காங்கிரஸுக்கு) வந்துவிட்டது. அப்போதே திமுக- அதிமுகவும் கூட்டணி ஆட்சி பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். இதனைத்தான் அதிமுகவின் சிவி சண்முகமும் கூறி இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய் முதல்வராகக் கூடாது என முயற்சி செய்து தோற்றுவிட்டார். விஜய்யை முதல்வராக்க விடாமல் தடுக்க வேண்டும் என்பதில் ஆளுநர் அர்லேகரும் உதவியாக இருந்தார்.
இதை நாங்கள் வெளியே சொன்னால் தவறாகிவிடும் என்று சொல்லவில்லை. தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் அனைவரும் சொல்லிவிட்டனர்.
நாடாளுமன்றத்தில் பாஜக ஆதரவு?
பாஜகவுடன் இணைந்து செயல்பட அதிமுக- திமுக இரண்டும் வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பிரிந்து தனியே இருக்கை ஒதுக்க சொல்லி இருக்கிறது திமுக. அப்படியானால் ஆளும் கட்சி வரிசையில்தான் அமர முடியும். நடுவில் உட்கார முடியாது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக திமுக இனி வெளிநடப்பு, வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்புகளை வெளியிடக் கூடும். பாஜகவுக்கு ஆதரவு தருவதற்காகவே இப்படி செய்வார்கள். நாடாளுமன்றத்தில் இனி இதுதான் நடக்கும். இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
