பொறுப்பேற்கத் துணிவில்லையென்றால் பனையூர் வீட்டிலேயே உட்காரலாம் என்று அமுதன் படுகொலை விவகாரத்தில் முதலமைச்சர் விஜயை திமுக விமர்சித்துள்ளது.
கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் , கல்லூரிக்கு வெளியில் சக மாணவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார்.
இதற்கு தனது எக்ஸ் பக்கம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ள திமுக, ”கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையிடம் அளித்த புகார், வெளியே கசிந்ததால் சக மாணவர்களாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசாமல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசுவது ஏன்?
மேடையில் ஏறி போதைப் பொருள் ஒழிப்பு என ரீல்ஸ் போடும் முதலமைச்சர், அதே நாளில் நடந்த இந்த சம்பவத்திற்கு பதில் சொல்லாமல், பொறுப்பு ஏற்காமல், மற்ற அமைச்சர்களை பேச சொல்வது ஏன்?
பொறுப்பேற்கும் துணிச்சல் இல்லாவிட்டால் பனையூர் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் தயாராகிவரும் பத்தாவது மாடியிலுமே நீங்கள் உட்காரலாமே முதல்வரே?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
