“தெற்கில் இருந்து நாட்டின் பிரதமராக ஒருவர் ஏன் வரக் கூடாது?” என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு பாஜக பதிலளித்துள்ளது.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து போகும்.. நாட்டின் பிரதமராக தெற்கில் இருந்து ஒருவர் ஏன் வரக் கூடாது?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இது தொடர்பாக சட்டசபை வளாகத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் கூறியதாவது: தெற்கிலிருந்து.. தமிழ்நாட்டில் இருந்து ஜி.கே. மூப்பனார், பிரதமராகக் கூடிய வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பு எப்படி தவறவிடப்பட்டது என்பது அன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரியும்.
நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடா, தென் மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்தவர்தானே.. தெற்கில் இருந்து பிரதமரான வரலாறு ஏற்கனவே இருக்கிறது. அது தெரியாமல் பேசக் கூடாது.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக முடியும்.

அமைச்சர் வன்னி அரசுக்கு கண்டனம்
சட்டசபையில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, ”பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் சபையில் ஒன்று சொல்வார்கள்; வெளியே ஒன்று சொல்வார்கள்.. அதை எப்படி நம்புவது?” என விமர்சனம் செய்தார்.
மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரை இப்படி எல்லாம் பேசுவது சரியா? இது கண்டனத்துக்குரியது. இதனை சபைக் குறிப்பில் இருந்து நீக்கவும் வலியுறுத்தினேன். இவ்வாறு போஜராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.
