வைஃபை ஆன் செய்ததும், ”நம்பிக்கை ஒன்றுதானே நம்பிக்கை..” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
எலக்ஷன் நேரத்துல யாரோட நம்பிக்கையை பத்தி சொல்றீரு?
எலக்ஷன் பிரசாரத்துல ஜரூரா இருக்கும் வேட்பாளர்கள்கிட்ட எடப்பாடி பேசுனதுதான் அதிமுக வட்டாரத்துல ஹாட் டாபிக்யா..
அப்படி என்ன பேசினாருன்னு எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சர்க்கிளில் பேசுனப்ப, “அதிமுகவோட மாஜி சீனியர் மினிஸ்டர்ஸ் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் போன்றவங்ககிட்ட எடப்பாடி பேசுறப்ப, “நம்ம சர்வேபடி 120 சீட்டு ஜெயிச்சுடுவோம்.. நாமதான் ஆட்சி அமைப்போம் அதனால தைரியமாக செலவு செய்யுங்க..”ன்னு உற்சாகப்படுத்தினாரு..
தென் மாவட்ட வேட்பாளர்களை கூப்பிட்டு சில விஷயங்களையும் எடப்பாடி சொல்லி இருக்காரு.. அவங்க கிட்ட, “நாம 1%, 2% பின்னாடிதான் இருக்கிறோம்.. அதனால வேகமாக வேலை செய்யுங்க.. இல்லைன்னா கஷ்டமாகிடும்”னு சொல்லி இருக்கிறாரு..
பாளையங்கோட்டை வேட்பாளர் சையது சுல்தான் சம்சுதீன்கிட்ட பேசும் போது, “2% சதவீத வோட் கேப் இருக்கு.. இதை விட்றாதீங்க.. நல்லா வேலை செய்யுங்க”ன்னு சொன்னாரு எடப்பாடி..
நெல்லை வேட்பாளர் தச்சை கணேசராஜாகிட்ட பேசுறப்ப, “தொகுதி நல்லா இருக்குய்யா.. இன்னும் கடுமையான வேலை செய்யுங்க”ன்னு சொல்லி இருக்காரு எடப்பாடி.
தென்காசி, மதுரை மாவட்ட வேட்பாளர்கள்கிட்ட பேசும் போது, “இந்த 2 மாவட்டத்துல நமக்கு கூடுதலாக சீட் வரப் போகுது..”ன்னு ரொம்பவே நம்பிக்கையா சொன்னார் எடப்பாடி” என்றனர்.
அதோட, “எலக்ஷன்ல சில தொகுதிகளுக்கு கட்சிகாரங்க செலவுக்குன்னு ரூ 3 கோடியை அனுப்பி இருக்காராம் எடப்பாடி.. அதாவது எலக்ஷன்ல நான் செலவு எல்லாத்தையும் பார்த்துக்குவேன்னு சொன்ன வேட்பாளர்களை விட்டுட்டு எடப்பாடி செலக்ட் செஞ்சு போட்ட வேட்பாளர்களுக்கு இந்த பணம் சப்ளையாகி இருக்குதாம்..
சென்னையிலேயும் ஸ்லம் ஏரியா உட்பட எங்கெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கலாம்னு லிஸ்ட் எடுங்கன்னும் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறாராம்யா..
அதே மாதிரி, ஜெயிக்க வாய்ப்புள்ள தொகுதிகளில்ல ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுங்கன்னும் சொல்லி இருக்கிறாராம்.. அதே நேரத்துல ஜெயிக்கவே வாய்ப்பு இல்லைன்னு நினைக்கிற தொகுதிகளில்ல எதுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்துகிட்டு? கொடுக்காமலேயே விட்டுடலாம்” அப்படிங்கிறதும் எடப்பாடி ஐடியாவாம்.
அதோட, ”வடக்கு- மேற்கு மாவட்டங்களில்ல அதிகமான சீட் வாங்கிடுவோம்”னு எடப்பாடி நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறாராம்.. வடமாவட்ட வேட்பாளர்களிட்ட பேசும் போது, “விஜய்க்கு நம்ம ஓட்டும் போகாது.. திமுக ஓட்டும் போகாது.. தலித் ஓட்டுகள்தான் வடமாவட்டங்களில் இருந்து விஜய்க்கு போகும்.. அதனால நாம கவலைப்பட வேண்டாம்.. ஜெயிச்சுடுவோம்”னு சொல்லியிருக்கிறாராம்யா எடப்பாடி என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
