காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ‘வந்தே மாதரம்’ (Vande Mataram) பாடலை முழுமையாக பாடுவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்து நிறுத்த சொன்னதாக சர்ச்சை வெடித்துள்ளது.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம், முதல் முறையாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பங்கேற்ற சுதந்திர தின விழாவில் பாடப்பட்டது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, சோனியா காந்தி- மல்லிகார்ஜூன கார்கே- ராகுல் காந்தி ஆகியோர் சைகையில் ஆவேசமாக பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது.
வந்தே மாதரம் பாடலைப் பொறுத்தவரை முதல் 2 சரணங்களை மட்டும் பாட வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இதனை மீறி வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட்டதால், காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த பாடலை பாதியிலேயே நிறுத்த சொன்னதாகவும் இது தேசியப் பாடலை அவமரியாதை செய்வதாகவும் பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஆனால் இதனை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நீண்டநேரம் நின்று கொண்டிருந்ததால் அவருக்காக நாற்காலியை கொண்டு வந்து போடுமாறு சோனியாவும் ராகுலும் சைகையில் கூறியதாக விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும் பாஜக தலைவர்கள் இந்த பிரச்சனையை விடுவதாக இல்லை. சமூக வலைதளங்களில், காங்கிரஸ் கட்சியையும் சோனியா காந்தியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
