சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக மாலை நேரத்தில் பசி எடுக்கும்போது பிஸ்கட், இனிப்பு அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை பாதிக்கலாம். அதற்கு பதிலாக சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த சிற்றுண்டிகளை தேர்வு செய்வது நல்லது.
முளைகட்டிய பச்சைப்பயறு, கொண்டைக்கடலை
மாலை நேர பசிக்கு முளைகட்டிய பச்சைப்பயறு சாலட்டை எடுத்துக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும். அதேபோல் வறுத்த கொண்டைக்கடலையிலும் புரதச்சத்து அதிகம் உள்ளது.
வேர்க்கடலையையும் அளவோடு சாப்பிடலாம். இதில் உள்ள நல்ல கொழுப்புச்சத்து இதய ஆரோக்கியத்துக்கு உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளரி, தயிரும் நல்ல தேர்வு
குறைந்த கலோரி கொண்ட வெள்ளரித் துண்டுகளை மாலை நேரத்தில் சாப்பிடலாம். அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.
மோர் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட தயிரையும் எடுத்துக்கொள்ளலாம். இது செரிமானத்துக்கு உதவுவதுடன், குறைந்த கலோரி கொண்ட உணவாகவும் இருக்கிறது.
விதைகள், கொய்யா பழம்
விதைகள் கலவையில் ஒமேகா-3 உள்ளிட்ட சத்துகள் உள்ளன. கொய்யாப்பழத்தையும் சிறிய அளவில் எடுத்துக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்தும் வைட்டமின் சியும் உள்ளன.
மாலை நேரத்தில் சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ அல்லது ஹெர்பல் டீ குடிக்கலாம். உடற்பயிற்சி, போதுமான தண்ணீர் மற்றும் சீரான உணவுப் பழக்கம் ஆகியவற்றையும் தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கியம்.
நீரிழிவு உள்ளவர்கள் தங்களது உடல்நிலை மற்றும் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப உணவைத் தேர்வு செய்வது பாதுகாப்பானது.
