டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் அளவை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (ஜூலை 10) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி,
“மதுபாட்டில்களை சாலைகள் மற்றும் நீர் வழிப்பாதைகளில் வீசும் போது விவசாயிகளுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்ட போது டெட்ரா பேக் (அட்டைப் பெட்டி) வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
டெட்ரா பாக்கெட்டுகளை கையாள்வதும் சுலபம், அதற்கான இடமும் குறைவாக தான் தேவைப்படும். எனவே துறை சார்பாக டெட்ரா பேக் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
இப்போது 180 எம்.எல் தான் குறைவான அளவு. இதனை ஒருவரால் முழுமையாக பயன்படுத்த முடியாது. எனவே இதற்காக அந்த நபர் மற்றொரு நபருக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் துறை சார்பாக ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் 40 சதவீதம் பேர் வேறொரு நபருக்காக குறைந்தபட்சம் அரை மணி நேரம் கடை அருகில் நின்று கொண்டிருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஆனால் அண்டை மாநிலங்களில் 90 எம்.எல் தான் குறைவான அளவாக இருக்கிறது. அதையே தமிழகத்திலும் கொண்டு வந்தால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்பதால் இது குறித்தும் முடிவெடுத்துள்ளோம்.
இவையனைத்தையும் எந்த ஒரு சட்ட விதிகளையும் மீறாமல், செய்ய வேண்டும். நாங்கள் எடுத்து வைக்கிற அடி மக்களுக்குப் பயனுடையதாக இருக்க வேண்டும் என்பதைப் பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்.
மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது கால நேரம். தற்போது மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன.
ஆனால் காலையில் 7 மணி முதல் 9 மணி வரை கடுமையான வேலைக்கு செல்பவர்கள் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.
இதற்கு என்ன தீர்வு என்ற கேள்வி வருகின்றது. எனவே இது குறித்தும் நாங்கள் ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.
மேலும் இரவே வாங்கி வைத்து கொண்டால் பரவாயில்லையே என்று கேட்டதற்கு, மதுவை வாங்கி வைத்து விட்டு இரவு முழுவதும் பார்த்து கொண்டிருக்க முடியாது.
அதுமட்டுமின்றி வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். இது பொறுப்பான பதிலாக தெரிந்ததால் இதனை தடுப்பதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.
இதனை தீவிரமாக பரிசீலித்து தான் இதற்கான முடிவை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.
மோனிஷா
ஜூலை 14ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
![]()
