2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று காங்கிரஸ் (Congress) கட்சியைச் சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரியில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியதாவது: 2029 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி, அடுத்த பிரதமராக வருவார்கள்.
ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் அதற்கு உடன்படாவிட்டால் காங்கிரஸ் கட்சியினுடைய 2 அமைச்சர்களும் இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள்.
எல்லா இடங்களிலும் நாம் சொல்லக்கூடிய கருத்து, ஏனென்றால் இந்த கட்சிதான் எங்களுக்கு பெரிது. இந்த கட்சி இல்லாவிட்டால் இந்த ராஜேஷ் குமார் ஒன்றுமே கிடையாது. இந்த இயக்கம் தான் பெரிது. இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ.. நாளைக்கு இந்த பதவியை விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னால் அடுத்த நிமிடமே பதவியை விட்டு சென்று விடுவோம். இவ்வாறு அமைச்சர் ராஜேஷ்குமார் பேசினார்.
பின்னணி என்ன?
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சட்டசபையில், நாட்டின் அடுத்த பிரதமர் விஜய்தான் என பேசி வருகின்றனர். வட இந்தியாவில் நாட்டின் அடுத்த பிரதமர் விஜய் என்கிற பிரசாரத்தை தவெகவின் பிரசார வியூக அமைப்பான ‘ரூட்’ மேற்கொண்டு வருகிறது.
இப்படி ராகுல் காந்திக்கு போட்டியாக விஜய்யை தவெக முன்னிறுத்துவது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த பின்னணியில்தான் அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
