‘அமரன்’ குறித்த முஸ்தபா எம்எல்ஏ சர்ச்சை பேச்சை முதல்வர் விஜய் கண்டிப்பாரா ? – நயினார் நாகேந்திரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் திரு. முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தவெக எம்எல்ஏ முஸ்தபா, சென்னையில் செய்தியாளர்களிடம், “உதயநிதி ஸ்டாலின் குழு எடுத்த அமரன் படத்தில் எப்படி வந்து பார்த்தீர்கள் என்றால், முஸ்லிம்களை அப்படியே வேறுவிதமாகக் காட்டிவிட்டார்களா? இஸ்லாமியர்களை அப்படியே வல்லரசாக மாற்றியது போன்றா காண்பித்தார்கள்? இல்லையே?

ADVERTISEMENT

அமரன் படத்தில் நடித்த, சிவகார்த்திகேயன், பாஜகவின் பாதுகாப்புத்துறை அமைச்சரை பார்த்தாரே… சிவகார்த்திகேயன் இருப்பது ஏதோ ஒரு தமிழ்நாட்டில் ஒரு எல்லை, அப்பொழுது யாருடைய தயவில் போய் பாதுகாப்புத்துறை அமைச்சரை பார்த்தார்? திமுகவின் தயவில்தான் பார்த்தார். எனவே முழுக்க முழுக்க இஸ்லாமிய மக்களை கேவலப்படுத்துவது திமுக..இஸ்லாமிய மக்களை கொச்சைப்படுத்துவது திமுக” என தெரிவித்திருந்தார்.

முஸ்தபாவின் இந்த பேச்சுக்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் திரு. முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்?

ADVERTISEMENT

தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, அண்மையில் ‘அமரன்’ திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பாரதத் தாயின் மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் திரு. முகுந்த் வரதராஜன் அவர்களின் வீர வரலாற்றைப் போற்றும் ‘அமரன்’ திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் திரு. முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்? திரு. முஸ்தபா அவர்கள் ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்? பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா?

ADVERTISEMENT

மேலும், முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ‘துப்பாக்கி’ திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் திரு. முஸ்தபா. திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழக முதல்வர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.”என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share