தமிழக வேளாண் பட்ஜெட்டை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தியதற்கு ஆளும் தவெக அரசை ஆதரிக்கும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக வேளாண் துறை அமைச்சர், வேளாண் துறை நிதிநிலை அறிக்கையைத் திருப்பதி கோயிலுக்குக் கொண்டு சென்று பூஜை செய்துள்ளார். இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. சட்டப்படி அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.
அமைச்சரான பிறகு, அந்தப் பொறுப்பிற்கு ஏற்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும். தாங்கள் விரும்பியபடியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்ற அறிவுரையைப் பொறுப்பானவர்கள் அவருக்குச் சொல்ல வேண்டும். இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும்
அரசியல் சாசன ஆவணம்.
தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல் சட்ட விரோதம்” என விமர்சித்துள்ளார்.
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும், முதல்வர் விஜய் அரசின் இந்த செயல், அரசியல் சாசன விரோதம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
