( உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மரிலின் மன்றோவைப் பற்றி நமது பொது புத்தியில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவல்களில் இல்லாத உண்மைகளை மகா பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த மே 29,2026 அன்று வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தியில் உள்ள சில வாசகங்கள் –தமிழ் வாசகர்களைக் கருத்தில் கொண்டு- விரிவாக்கப்பட்டுள்ளன )
தமிழாக்கமும் அடிக்குறிப்புகளும் – எஸ்.வி.ராஜதுரை
மரிலின் மன்றோ என்று உலகத்தால் அறியப்பட்ட நார்மா மார்டென்சன் (Norma Jeane Mortenson) நூற்றாண்டுகளுக்கு முன் 1926 ஜூன் 1ஆம் தேதி பிறந்தார். அவர் பிறந்து ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது.
உற்பத்தி செய்யப்பட்ட ஒரு விக்கிரகத்தின் ஆவியைப் பார்த்து முதலாளித்துவப் பத்திரிகைகள்,வாயைப் பிளந்து கொண்டிருக்கையில், பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி அந்தக் கூரறிவாளியையும் தோழரையும் மீட்டெடுக்கிறது.
அவரது அரசியல், தொழிற்சாலையில் பொருட்களை உருவாக்குவதற்காக வரிசையாக நிற்கவைக்கப்பட்ட தொழிலாளர்களிடமிருந்து பிறந்தது. லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்த குழந்தை வளர்ப்பு இல்லங்கள் முதல் ரேடியோபிளேன் வெடிமருந்துத் தொழிற்சாலை வரை (Radioplane munitions factory), உயிர் பிழைப்புக்காக பாட்டாளி வர்க்கம் நடத்திய போராட்டச் சூட்டில் மன்றோவின் வர்க்க உணர்வு வார்த்தெடுக்கப்பட்டது.
அவர் மிகுந்த கூரறிவு கொண்டிருந்த பெண்மணி; அவரைக் கையாள முயன்ற ஆண்களைக் குள்ளர்களாக்கும் நுண்ணறிவுத்திறன் (IQ) அவரிடம் இருந்தது. ஆனாலும், ஒட்டுண்ணி போன்ற ஸ்டுடியோ அமைப்பால் வாங்கவும், விற்கவும், வர்த்தகம் செய்யவும்படக் கூடிய சரக்காக அவர் குறுக்கப்பட்டார்.
அவரது இறுதி மூச்சு வரை அவரைக் கண்காணித்த எஃப்.பி.ஐ. (FBI) கோப்புகள், மார்க்ஸைப் படித்தவராகவும் சீனப் புரட்சியைப் போற்றியவராகவும் இருந்த ஒரு ’கவர்ச்சிக் கன்னி’யக் கண்டு அதிகாரத்தில் இருந்தோர் அஞ்சியதை உறுதிப்படுத்துகின்றன. அவர் போர்க்குணமிக்க இனவெறி எதிர்ப்பாளர்.
எல்லா ஃபிட்ஸ்ஜெரால்ட் (Ella Fitzgerald ) நிறப் பாகுபாட்டுக்கு உள்ளாகியிருந்த போது அதைத் தகர்க்கத் தனது மேடையைப் பயன்படுத்தினார். மேலும், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லரை (Arthur Miller) மணந்து கொண்டதன் மூலம் கம்யூனிஸ்டுகள், அவரது ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்களை வேட்டையாடிய , மெக்கார்த்தியிசத்தின் கோழைத்தனத்திற்கு எதிராக உறுதியாக நின்றார்.
மன்றோவின் போராட்டம், வர்க்கச் சுரண்டலும் ஆணாதிக்க வன்முறையும் இணைந்திருந்த நிலைக்கு எதிரானதாக இருந்தது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் ஒரு தொழிலாளி; அவரது உடல்தான் அவரது உழைப்பாக இருந்தது.
அவர் மெளனமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று கோரிய ஓர் அமைப்பால் அவரது உடல் கடுமையாகச் சுரண்டப்பட்டது. அவரது வாழ்க்கை, மூலதனத்தின் ஆண் பார்வைக்கு எதிரான தொடர்ச்சியான கிளர்ச்சியாக இருந்தது.
அவரது 100வது பிறந்தநாளில், நாம் ஒரு ” கவர்ச்சிமிக்க ஓர் அழகு சின்னத்தை” கொண்டாடவில்லை. தனது வர்க்கத்தின் விடுதலை, தனது பாலினத்தின் விடுதலையிலிருந்து பிரிக்க முடியாதது என்பதைப் புரிந்துகொண்டு தெளிவான சிந்தனை கொண்டிருந்த சோசலிஸ்ட்டை நாம் கௌரவிக்கிறோம்.
மகிழ்ச்சியான நூற்றாண்டு வாழ்த்துகள் தோழர் மரிலின். போராட்டம் தொடர்கிறது.
கட்டுரையாளர்

எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
