டெல்லி ஜந்தர் மந்தரில் அடுத்த கட்ட போராட்டம் விரைவில் தொடங்கும் என்று காக்ரோச் ஜனதா கட்சி- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி 36 நாட்கள் போராட்டம் நடத்தியது. கடந்த ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கிய முற்றுகைப் பேரணியும் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் காக்ரோச் ஜனதா கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, “ஆலோசனைக் கூட்டத்தை நடத்த கூட மண்டபம் தர மறுக்கின்றனர். அரசுதான் நெருக்கடி கொடுக்கிறது. ஜந்தர் மந்தரில் அடுத்த கட்ட போராட்டத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்” என்றார்.
சவுரவ் தாஸ் குற்றச்சாட்டு
இதனிடையே காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், புதுச்சேரியில் உள்ள தமது குடும்பத்தினரை போலீசார் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சவுரவ் தாஸ், “புதுச்சேரி பாஜக அரசு ஏன் என் குடும்பத்தினரை மிரட்டுகிறது? மத்திய அரசுதான் தூண்டிவிடுகிறது” என குற்றம் சாட்டி உள்ளார்.
