மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்வார் செழியன் – சீமான் இரங்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

seeman

தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூலை 10) காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னணி ஒளிப்பதிவாளரும், தேசிய விருதுபெற்ற இயக்குநருமான தம்பி இரா.செழியன் அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் தனது கலைப்பணிகள் மூலமாக மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதானிருப்பார்.

ADVERTISEMENT

தமிழ்த்திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும், தலைசிறந்த இயக்குநருமான என் ஆருயிர் இளவல் இரா.செழியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் அவரது மனைவி பிரேமா, உடன்பிறந்த சகோதரர்களான தம்பிகள் இளங்கோ, சரவணன் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மதிப்பிற்குரிய ஐயா பி.சி.ஸ்ரீராம் அவர்களின் பட்டறையில் பயின்று, கல்லூரி, தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி உள்ளிட்டத் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, தனது தனித்திறன் ஆற்றலாலும், துறை சார்ந்த நிபுணத்துவத்தாலும் பெயர் பெற்ற தம்பி செழியன் அவர்கள், தம்பி பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்திற்காக இலண்டனில் நடைபெற்ற சர்வதேசத் திருவிழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார். ‘டு லெட் (To Let)’ எனும் திரைப்படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றதன் மூலம் ஆகச்சிறந்த இயக்குநராகவும் மிளிர்ந்தார். தனது திரைப்படங்கள் குறித்தான அறிவைப் பகிரும்பொருட்டு, ‘உலக சினிமா’ எனும் பெயரில் நூலும் எழுதியவராவார். திரைத்துறை சார்ந்த ஆழமான அறிவையும், நுட்பமான கலைத்திறனையும் கொண்டிருந்த தம்பி செழியன் அவர்களின் இழப்பு தமிழ் கலையுலகுக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும்.

ADVERTISEMENT

தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பு கொண்டிருந்தவர் தம்பி செழியன். என்னுடைய ‘தம்பி’ திரைப்படத்தின் ஆக்கத்துக்கும், வெற்றிக்கும் பெரும் உழைப்பைச் செலுத்தினார். தமிழ்த்தேசியம் குறித்தும், நாம் தமிழர் கட்சி குறித்தும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த தம்பி செழியன், நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறைக்குப் பெரும் பங்காற்றியவராவார். எப்போதும் என்னோடு அன்பொழுகப் பழகும் என்னுடைய அன்புத்தம்பி செழியன் அவர்களை இனி எப்போதும் காணவே முடியாது என்பதை உள்ளம் ஏற்க மறுக்கிறது. அவரது மறைவுச்செய்தி என்னை முற்றாக நிலைகுலையச் செய்திருக்கிறது. எனது உடன்பிறந்தவனை இழந்துவிட்டு ஆற்ற முடியாத ரணத்தோடும், வலியோடும் தவிக்கிறேன். தம்பி செழியன் அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் ஆற்றிய கலைப்பணிகள் மூலமாகக் காலங்கடந்து மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதானிருப்பார்.

தமிழ்த்திரையுலகின் கலை ஆளுமை என்னுடைய தம்பி செழியன் அவர்களின் நல்லுடல் கலையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் இறுதி வணக்கம் செலுத்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தலைசிறந்த கலைஞனான தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share