ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் விதமாக இளம் கலைஞர்கள் சார்பில் நடனம் இசைக்கச்சேரி ஆகியவை நடத்தப்பட்டன.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது பிரசித்தி பெற்ற ஆனைமங்கலம் தாமிர தகடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவை லெய்டன் தகடுகள் என்று அழைக்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் அரசாட்சிகளில் ஒன்றான 11 ஆம் நூற்றாண்டு சோழ அரசாட்சி காலத்திலான இந்த கலைப்பொருட்கள் லெய்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக 2023ல் யுனெஸ்கோ அமைப்பின் தலையிட்டால் இந்த செப்பேடுகள் திருப்பி தரப்பட்டுள்ளன.
சுமார் 30 கிலோ எடை கொண்ட 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாம் ராஜேந்திர சோழனின் முத்திரையும் உள்ளதாக கூறப்படுகிறது.
டச்சு நாட்டின் கிழக்கிந்திய நிறுவனம் நாகையில் 17ஆம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்திய போது, இவற்றை கைப்பற்றி நெதர்லாந்துக்கு எடுத்து சென்று இருப்பதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த சூழலில் அவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோ வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்று வெற்றி! லெய்டன் தகடுகள் இந்தியா திரும்புகின்றன!
நூற்றாண்டுகளாக நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்த ஆணைமங்கலம் செப்பேடுகள் இனி தாய் மண்ணுக்கு திரும்புகின்றன!
21 செப்புத் தகடுகளில் பொறிக்கப்பட்ட இந்த அரிய வரலாற்று ஆவணம், மாமன்னர் இராஜராஜ சோழனின் மகத்தான மதச்சார்பற்ற உள்ளத்தை நிரூபிக்கிறது — ஆணைமங்கலம் சுற்றிலுள்ள 26 கிராமங்களை ஒரு பௌத்த விகாரைக்கு வழங்கிய பெருந்தன்மையை இராஜேந்திர சோழன் இந்தத் தகடுகளில் பதிவு செய்தார்!
28/11/2024 மற்றும் 11/12/2025 ஆகிய தேதிகளில் நான் ராஜ்யசபாவில் இந்த கேள்வியை எழுப்பி, மத்திய அரசு இந்த மாணிக்கங்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். விடா முயற்சி வெற்றி பெற்றது!
இது வெறும் செப்புத் தகடுகள் மட்டுமல்ல — இது தமிழ் பெருமையும், பௌத்த பாரம்பரியமும், இந்தியாவின் நாகரிக வேர்களும் தாய் மண்ணுக்கு திரும்புவதன் அடையாளம்!
நம் முன்னோர்கள் மதச்சார்பற்றவர்கள் — வரலாறே சாட்சி! வரவேற்கிறோம், ஆணைமங்கலம் செப்பேடுகளே” என்று தெரிவித்துள்ளார்.
