முதல்வர் விஜயின் பிகில், கோட் ஆகிய படங்களின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்திக்கு அரசு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கும், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்களுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் தயாரிப்பாளரான கே வி வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் முதல்வர் விஜயின் பிகில் பட தயாரிப்பாளரான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
இந்து சமய மற்றும் அறநிலைய கொடைகள் சட்டம் 1959 பிரிவு 46 (III)ன் கீழ் பிரசுரம் செய்யப்பட்டுள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர் பட்டியல் தயாரித்து அரசுக்கு அளித்திட மாநில குழு அமைக்க ஆணை வெளியிடப்பட்டது. இந்த குழுவின் பதவி காலம் இரண்டு ஆண்டுகளாகும்.

தற்போது இந்த குழு 2026 ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவுற்றதை அடுத்து, புதிய குழுவினை அமைக்க அறநிலையத்துறை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையை ஏற்று, கீழ்க்கண்ட உறுப்பினர்களை கொண்ட மாநிலக் குழுவினை அமைத்து அரசு உத்தரவிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் உறுப்பினராக மயிலம், பொம்மபுரம் சிவஞான பாலய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சம்பத், சுமதி, வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதவி வழி/ உறுப்பினர் செயலராக அறநிலையத்துறை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
