தமிழக முதல்வர் விஜய்யுடன் கர்நாடகா செல்ல உள்ள 13 பேர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை உடனே திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்லியில் இன்று (ஜூலை 30) செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், “காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரைத் திறந்துவிட முடியாது” எனக் கூறினார். மேலும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் பெங்களூரு வரவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்துத் தமிழக அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
தமிழக முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தக் கர்நாடகா செல்வதற்குக் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. தமிழகத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகச் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழு:
இதனிடையே, காவிரி விவகாரம் குறித்து கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்தை நடத்த திட்டமிட்டுள்ள, முதலமைச்சர் விஜய்யுடன் செல்லவிருக்கும் 13 பேர் கொண்ட குழுவின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில்:
அமைச்சர்கள்: ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்.
அரசு அதிகாரிகள்: தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் 2 தனி செயலாளர்கள்
சட்ட வல்லுநர்கள்: தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி.
ஆலோசகர்கள்: ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி.
தொழில்நுட்பக் குழு: நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர், தலைமைப் பொறியாளர் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர்.
அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்:
தமிழக முதலமைச்சரின் பயணம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “மேகதாது விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும். மேலும், முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா, இல்லையா என்பது குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
