நெல்லையில் கிரில் சிக்கனுக்கு மையோனஸ் தராததால் வாடிக்கையாளருக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்த பாஜகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக மாலை வேளைகளில் வழக்கமாக மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். எனவே அந்த பகுதியில் உள்ள ஓட்டல்களிலும் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

மையோனஸ் கேட்டு தகராறு!
இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு ஊருடையான் குடியிருப்பைச் சேர்ந்த சிவன் பெருமாள் என்பவர் தனது நண்பர்கள் இருவருடன் நேற்று இரவு சாப்பிட வந்தார். அப்போது அவர்கள் வாங்கிய கிரில் சிக்கனுக்கு, ஓட்டல் ஊழியர்கள் மையோனஸ் ( Mayonnaise) தரவில்லை. இதனையடுத்து சிவன் பெருமாள் உள்ளிட்ட மூவரும், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் ஓட்டலும் சூறையாடப்பட்டது. இந்த மோதலில் சாப்பிட வந்த சிவன் பெருமாள் படுகாயமடைந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு!
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த சிவன் பெருமாளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருதரப்புக்கும் நடந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிவன் பெருமாள் பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பது தெரியவந்தது.
கிறிஸ்டோபர் ஜெமா

Comments are closed.