வங்கதேச நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 778 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வங்கதேசம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் போராடி வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 778 பேர் இறந்துள்ளனர் மற்றும் 1,57,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வங்கதேச அரசாங்கத்தின் பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எனினும் வங்கதேச நாட்டின் பல இடங்களில் டெங்கு பாதிப்பு குறித்து சரியான தகவல்கள் கிடைக்கபெறவில்லை. இதனால் உயிரிழப்பு மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று ஐ.நா குழந்தைகள் நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையே அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள முக்தா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
என்ன சிகிச்சையளிப்பது என்று தெரியவில்லை!
இதுகுறித்து டாக்காவில் உள்ள முக்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் முகமது நியாதுஸ்மான் கூறுகையில், “டெங்கு ஒழிப்பில் ”நிலையான கொள்கை” இல்லாததால் பங்களாதேஷ் நிலைமையை சமாளிக்க போராடி வருவதாகவும், அதற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்று இங்குள்ள பலருக்கும் தெரியவில்லை. டாக்கா மற்றும் பிற பெரிய நகரங்களுக்கு வெளியே, செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களுக்கு டெங்குவைக் கையாள்வதில் சிறந்த பயிற்சி தேவை” என்று அவர் கூறியுள்ளார்.

ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை தேவை!
சுகாதார நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துப்படி, வங்கதேசத்தில் டெங்கு தடுப்பு விவகாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மறுசீரமைப்பு இல்லை. முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், வங்க தேசம் டெங்கு காய்ச்சலினால் வரலாறு காணாத அளவுக்கு போராடி வருகிறது.
டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில் நகர, மாநகராட்சிகள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் போன்ற குழுக்களை அதிகாரிகள் சேர்க்க வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படும் நோய்பரவலை தடுக்க தயாராக வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
Asia cup: 11 ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்திடம் ’தோல்வி வடு’ கண்ட இந்தியா
கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை
