சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று மாணவ – மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் சமீப நாட்களாக காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக பருவமழை காலம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. 9 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த சூழலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவ – மாணவிகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்பு மாணவிகள் மிருதுளா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் உயிரிழந்த நிலையில் இன்று நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர் ஹரிஷ் குமார் உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் கடந்த நான்கு நாட்களாக மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்த ஹரிஷ் குமார் இன்று (செப்டம்பர் 18) மரணம் அடைந்துள்ளார்
அதோடு விடுதியில் படிக்கும் மேலும் பல மாணவர்களுக்கும் காய்ச்சல் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மாணவர்கள் காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை பெறாமல், சாதாரண காய்ச்சல் என மாத்திரை எடுத்துக்கொண்டு இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் பல்கலையை சுற்றி ஏடிஎஸ் கொசுக்கள் வராமல் இருக்க மருந்துகள் அடித்து உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
