பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்துக்கு பாமக (செயல்) தலைவர் அன்புமணி திடீரென சென்றது அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. Anbumani Ramadoss PMK
கும்பகோணத்தில் இன்று ஜூலை 10-ந் தேதி நடைபெற்ற மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், “என் பேச்சை கேட்காதவர்கள் (அன்புமணி) என் பெயரை பயன்படுத்தக் கூடாது; தேவைப்பட்டால் இனிஷியல் மட்டும் போட்டுக் கொள்ளலாம்” என கடுமையாக கூறியிருந்தார். மகன் அன்புமணி பெயருக்கு பின்னால் தனது பெயரை போடுவதற்கு பகிரங்கமாக ராமதாஸ் தடை விதித்தது பாமகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இன்று ஜூலை 10-ந் தேதி இரவு 7.50 மணியளவில் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்துக்கு திடீரென அன்புமணி சென்றார். இதனால் பாமக வட்டாரங்கள் பரபரப்படைந்தன.
அன்புமணியின் இந்த திடீர் விசிட் தொடர்பாக தைலாபுரம் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, கும்பகோணத்தில் கட்சி நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்றுள்ளார். ராமதாஸ் வீட்டில் இல்லாத நிலையில்தான் அன்புமணி வந்தார். மகள்களான ஶ்ரீகாந்தி, கவிதா ஆகியோரை விட மகன் அன்புமணி மீதுதான் தாயார் சரஸ்வதி அம்மையாருக்கு பாசம் அதிகம். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தாயாரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு செல்வதற்காக அன்புமணி, தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தார். அங்கு தாயார் கையால் டிபன் சாப்பிட்டார் அன்புமணி. பின்னர் ஓமந்தூரில் ராமதாஸின் தொடக்க கால பிஏ நடராஜன் இல்ல திருமண விழா நடைபெறுகிறது. அதில் அன்புமணி பங்கேற்கிறார். இந்த சந்திப்பின் போது அப்பா- மகன் இடையேயான மோதலால் சரஸ்வதி அம்மையார் கண்கலங்க, அன்புமணியும் கண்கலங்கினார் என தெரிவித்தன.
