தஞ்சாவூரில் தம்மை அடித்த போலீஸ் அதிகாரியை திருப்பி அறைந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ஆகாஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் ஆகஸ்ட் 17-ந் தேதி விசிகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் என்ற இளைஞர், போராட்டக்காரர்களுடன் வழிவிட சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த போலீசார் அங்கு வந்து, இளைஞர் ஆகாஷை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது, SSI ரஹீம் என்ற போலீஸ் அதிகாரி, ஆகாஷின் கன்னத்தில் அடித்தார். சட்டென, ஆகாஷும் போலீஸ் அதிகாரி ரஹீம் கன்னத்தில் திருப்பி அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஆகாஷை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டது. அத்துடன், ”பொது இடத்தில் இளைஞர் ஆகாஷை போலீசார் ஏன் அடித்தனர்? போலீஸ் என்றால் பொதுமக்களை அடிக்கலாமா? ஆகாஷை போலீசார் மேலும் தாக்காமல் இருக்க வேண்டும்” என்கிற கருத்துகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆகாஷ் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். போலீஸ் தரப்பில், நல்லெண்ண அடிப்படையில் ஆகாஷ் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
