தஞ்சாவூரில் பொதுமக்கள் முன்னிலையில் போலீஸ் அதிகாரி ஒருவரை இளைஞர் கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் தமக்கு வழிவிட வேண்டும் என்று போராட்டம் நடத்திய விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் போலீசார் அங்கு வந்து, இளைஞரை அந்த இடத்தை விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனாலும் அந்த இளைஞர் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, “இந்த இடத்தை போகிறாயா? இல்லை அடிக்கவா?” என போலீஸ் அதிகாரி ஒருவர் கோபத்தில் கேட்டார்.

இதனையடுத்து அந்த இளைஞர், “எங்கே அடிடா பார்க்கலாம்?” ஆவேசப்பட்டார். இதனால், போலீஸ் அதிகாரி, அந்த இளைஞர் கன்னத்தில் அறைந்தார். உடனே பதிலுக்கு அந்த இளைஞரும் போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இளைஞரை தடுத்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். போலீஸ் வேனில் இருந்து இறங்கி தப்பிச் செல்ல அந்த இளைஞர் முயன்ற போதும் போலீசார் அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
