இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று திடீரென சர்ச்சைக்குரிய கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என தவெக தலைவர் நடிகர் விஜய் மதுரை மாநாட்டில் பேசியதைத் தொடர்ந்து இலங்கையில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில் அநுர குமார திஸாநாயக்கவின் இந்த பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இலங்கையின் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்துக்கு இன்று(செப்டம்பர் 1) காலை சென்றார் அந்நாட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.

யாழ்ப்பாணம் உள்ளிட வட பகுதிகளுக்கு 2 நாட்கள் பயணமாக சென்றார் அநுரகுமார திஸாநாயக்க. யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது கச்சத்தீவு விவகாரம் குறித்தும் அவர் பேசினார்.
தமிழ்நாட்டின் மதுரையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் நடிகர் விஜய், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நடிகர் விஜய்யின் இந்த பேச்சு, கடந்த ஒரு வாரமாக இலங்கையில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த பின்னணியில் யாழ்ப்பாணத்தில் இன்று அரசு நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, “கச்சதீவு இலங்கைக்கு உரியது. அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை யாரும் அசைக்க முடியாது.

இலங்கையில் கடல்சார் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு கச்சத்தீவு மிக முக்கியமானது; உணர்வுபூர்வமானது. கச்சத்தீவு இலங்கையின் மீன்பிடி சமூகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கச்சத்தீவு தொடர்பில் பெரிய பொது விவாதம் எழுந்துள்ளது,
இலங்கையின் பொறுப்பு அதன் நிலப்பரப்பைத் தாண்டி கடல் எல்லைகள் மற்றும் வான்வெளியை உள்ளடக்கியது. நமது தீவுகள், நமது கடல் நமது வானம் அல்லது நமது நிலம், அவை நமது மக்களுக்குச் சொந்தமானவை. எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்
எனவே, எந்த வகையான வெளிப்புற அழுத்தத்துக்கு நாங்கள் அடிப்பணியமாட்டோம் என பேசினார்.
கச்சத்தீவில் இலங்கை ஜனாதிபதி
இதன் பின்னர் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் இருந்து மாலை 5 மணிக்கு இலங்கை கடற்படையினரின் 4 படகுகளில் கச்சத்தீவுக்கு அநுரகுமார திஸாநாயக்க, பயணம் மேற்கொண்டார்.

கச்சத்தீவைப் பார்வையிட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கச்சத்தீவு பயணம் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
